சந்தன வீரப்பன், ஆட்டோ சங்கர் பிறந்தநாளையும் கொண்டாடுவீரோ: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடினால், சந்தனக் கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் பிறந்தநாள்களைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக உச்ச நீதிமன்றதால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாளை, கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசும், அதிமுகவினரும் கொண்டாடினர்.
அரசு விழா போல
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடுவது, மருத்துவத்துறை சார்பில் 690 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது போன்றவற்றை செயல்படுத்தி ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழா போல் கொண்டாடினார்.
அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
குற்றவாளியின் பிறந்த நாளை அரசு விழா போல் கொண்டாடுவதா என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாகும்
இதுகுறித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவிக்கையில், குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை முன்னிலைப்படுத்தும் விதமாக ஜெயலலிதாவின் பிறந்தநாள விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவில் தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டது சட்டவிரோதமாகும்.
தவறான முன்னுதாரணம்
இந்தக் தவறான முன்னுதாரணம் தொடருமேயானால் வரும் காலங்களில் சந்தன கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் போன்ற குற்றவாளிகளின் பிறந்த நாள்களையும் அரசு விழாவாக கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும். எனவே தமிழக ஆளுநர் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.