என் பள்ளி நினைவுகளிலிருந்து சில உங்களுடன்!
சென்னை: அனைவருக்கும் ஆசிரியர் தின நலவாழ்த்துகள். ஆசிரியர் தினம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது நம் பள்ளி பருவம் தான்.
நமது கைபிடித்து தாய் மொழியை கற்பித்தது ஆசிரியர்களே! பள்ளிகளில் ஆசியர் தினத்தை விமரிசையாக கொண்டாடியது, பிடித்த ஆசிரியர்க்கு பரிசு பொருள்கள் அளித்தது, வகுப்பு தேர்வை வாழ்த்துக்கள் கூறி தள்ளி வைத்தது என என் நினைவுகளை இன்றைய நாளில் எனது பள்ளி ஆசிரியர்கள் பற்றி உங்களிடம் பகிர ஆசை படுகின்றேன்.
முதல் தன்னம்பிக்கை
ஆரம்பகாலத்தில் நான் மிகவும் அமைதியானவள். பெரிதும் பேசி கொள்ள மாட்டேன். முக்கியமாக பொது இடங்களில் தைரியமாக பேசியதில்லை. இன்று நிலைமையே வேறு. அதற்கு காரணம் 5ம் வகுப்பில் முதல் பேச்சு போட்டியில் ஊக்குவித்து உன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை விதை விதைத்தது என் வகுப்பு ஆசிரியர் செல்வி. மெர்சி அவர்கள். நான் அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை.
அவர்கள் என்னை மனம் தளரவும் விடவில்லை. பின்னாளில் நான் பேச்சு போட்டியில் இருக்கிறேன் என்றால் மற்ற மாணவர்கள் தயங்கும் அளவுக்கு என்னை உருவாக்கிய பெருமை அவர்களையே சேரும். இத்தருணத்தில் நான் அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன்.
தமிழ் ஆர்வம்
தமிழ் நம் தாய் மொழி. அதில் இலக்கணம் தனி பாடம். அது அத்தனை எளிதாக யாருக்கும் மனதில் பதியாது. ஆனால் இலக்கணத்தையே விரும்பும் அளவுக்கு தமிழை எனக்கு கற்று தந்தது திருமதி மிர்ஜா கிளாடிஸ் அவர்கள் .
நான் மட்டும் அல்ல என் பள்ளியில் உள்ள அனைவருக்குமே அவரின் தமிழ் நடை அவ்வளவு எளிதாக பதிந்து விடும். கண்டிப்புடன் அன்பான வார்த்தைகளிலே எங்களை கட்டி போட்டவர். உங்களுக்கு என் நன்றிகளை கூறி கொள்கிறேன்.
நல் ஒழுக்கத்தில் ஆசிரியர் பங்கு
கணிதம் எனக்கு எளிதான ஒன்றா என்பது தெரியாது ஆனால் அதை பயிற்றுவிப்பது எளிது என நிரூபித்த கணக்கின் ராணி,
எங்கள் கணக்கு ஆசிரியர் திருமதி ராணி அவர்கள். அவர்களிடம் நான் கற்றது பாடம் மட்டும் அல்ல நல்ல ஒழுக்கத்தையும் தான் என்பதில் பெருமை கொள்கின்றேன். அன்று அவர் சொன்ன சில விஷயங்கள் இன்றும் என் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கின்றது. உங்களுக்கு என் நன்றிகளை கூறி கொள்கிறேன்.
வரலாறு முக்கியம் அமைச்சரே
சமூக அறிவியல் இதில் நான் பயின்ற இரு ஆசிரியர்களை பற்றி நினைவு கூற விரும்புகிறேன். முதலில் திருமதி மேரி ஆசிரியர் அவர்கள். அவரிடம் உள்ள சிறப்பே வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை கற்பிப்பது அந்த நிகழ்வுகள் எதனால் ஏன் என முழுவதும் தெரிந்து கொண்டு வந்து, அதை எங்களுக்கு சொல்லிய பின்னரே பாடத்தின் உள்ளே செல்வார். ஆனால் அவரிடம் நீண்ட நாள் பயில முடியவில்லை. பணி இட மாற்றம் காரணமாக, அவரை வேறு பள்ளி மாணவர்களுக்கு பணி ஆற்ற செல்ல வேண்டியதாயிற்று.
இரண்டாவது அமுதன் அய்யா. அவரை விளையாட்டாக அழைத்த பள்ளி பருவம். இந்தியா வரைபடத்தை முழுவதுமாக என்னால் இன்றும் கூற முடியும் எனில் அவர் அளித்த கல்வியே. ஒவ்வொரு வருடமும் எந்த நிகழ்வு எப்படி நினைவில் வைப்பது, என்பதில் இருந்து மொத்த வரலாற்றையும் கரைத்து குடித்து இருக்கிறோம். நன்றி அய்யா இன்று விளையாட்டாக கூறவில்லை பெருமையுடன் கூறுகிறேன்.
இது மட்டுமல்ல இன்னும் நிறைய உள்ளங்கள் எங்களை போன்ற மாணவர்களை உருவாக்கி கொண்டுதான் உள்ளார்கள் என்னால் அனைவரையுமே கூற முடியவில்லை. அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
- திவ்ய பாலா