மானாமதுரை அருகே பெண் போலீஸ் மர்ம மரணம்... கணவரே அடித்து கொலை செய்தாரா?
மானாமதுரை அருகே பெண் போலீஸ் ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை: மானாமதுரை அருகே பெண் போலீஸ் ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கட்டிக்குளத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகள் சர்மிளா. புதுக்கோட்டை ஆயுத படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சர்மிளா அதே ஊரைச் சேர்ந்த வீரராகவன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். வீர ராகவன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 1ம் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்த வீரராகவன், மனைவியை விடுப்பு எடுக்கும்படி கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் சர்மிளா தனது வீட்டில் இன்று காலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்த தகவலறிந்து மகளின் வீட்டிற்கு சென்ற பெற்றோர், வீரராகவன் தான் தங்கள் மகளை அடித்துக்கொன்று விட்டதாக போலீசில் புகார் அளித்தனர். ஆனால் இதனை மறுத்துள்ள வீரராகவன், சர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகே சர்மிளா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என தெரிய வரும். பெண் போலீசின் மர்ம மரணம் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சக காவலர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.