"நான் யார் பேரையும் சொல்ல விரும்பலை".. வைகோ சொன்ன குட்டிக் கதை!
கோவை: ஜெயலலிதா குட்டிக்கதை சொல்லி அசத்துவார்.. சில சமயங்களில் கருணாநிதி பேசும்போது கதை சொல்வார். அதேபாணியில்
போக்கிரி வாலிபரும், அவரது தந்தையும் என குட்டிக்கதை ஒன்றை திருப்பூரில் சொல்லியுள்ளார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் வரிசையாக திமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் கலகலத்துப்போயுள்ளது மதிமுக கூடாரம். மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள வைகோ மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்த மண்டலவாரியாக நடத்தி வருகிறார் வைகோ.
ம.தி.மு.க.வை சிதைக்க தி.மு.க. முயற்சிப்பதாக கூட்டம் தவறாமல் முழங்கும் வைகோ, தற்போது அதற்கு தகுந்தார்போல குட்டிக்கதையையும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
திருப்பூரில் நடந்த கொங்கு மண்டல ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில், பேசிய வைகோ, ம.தி.மு.க.வை தி.மு.க. அழிக்க நினைப்பதை ஒரு கதையைச் சொல்லி விளக்கினார். அந்த கதையை நீங்களும் படியுங்களேன்.
"ஒரு ஊரில் பண்புள்ள குடும்பம். அந்த குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை, எழிலோடு வளர்ந்து பருவத்தை எட்டியது. அழகான, நல்ல குணமான பெண்ணாக வளர்ந்தார். அப்போது அந்த ஊரில் போக்கிரித்தனம் செய்து கொண்டிருந்த ஒருவன் அந்த பெண்ணை மணம் முடிக்க வேண்டி, அந்த பெற்றோரிடம் இந்த போக்கிரித்தனம் செய்து கொண்டிருப்பவரின் தந்தை, அந்த பெண்ணின் பெற்றோரிடம் என் மகனுக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்து தருமாறு கேட்கிறார்.
பையனின் குணமும், நடவடிக்கையும் சரியில்லாததால் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார்கள் பெண்ணின் பெற்றோர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பையனின் தந்தை, அந்த பெண்ணை எவனும் கட்டக்கூடாது நாசம் செஞ்சுருனு மகனிடம் சொல்றார்" இதற்கு மேல் இந்த கதையை நான் கூற விரும்பலை. இதேபோல் தான் கூட்டணிக்கு வா. வரவில்லை என்றால் உன் கட்சியை நாசம் செய்துவிடுவேன் என கதையில் வரும் 'போக்கிரி வாலிபரும்', அவரது தந்தை கதாபாத்திரங்கள் போல கட்சியை அழிக்க துடிக்கிறார்கள். நான் யார் பேரையும் சொல்ல விரும்பவில்லை" என வைகோ சொல்லி முடித்தார்.
புரியவேண்டியவங்களுக்கு கதை புரிஞ்சா சரிதான்!