ஆதார் வைத்திருந்தாலே இந்திய குடிமகன் இல்லை.. முக்கிய வழக்கில் மதுரை ஹைகோர்ட் தீர்ப்பு!
ஆதார் அட்டை வைத்து இருப்பவர்கள் எல்லோரும் இந்திய குடிமகன்கள் இல்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை முக்கியமான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை: ஆதார் அட்டை வைத்து இருப்பவர்கள் எல்லோரும் இந்திய குடிமகன்கள் இல்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை முக்கியமான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இலங்கையை சேர்ந்த ஜெயந்தி என்பவரின் வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜெயந்தி தமிழகத்தில் வசித்து, ஆதார் அட்டை பெற்று இருந்தாலும் கூட அவரை இந்திய குடிமகளாக கருத முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய குடிமகன்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்படும் என்று சுஷ்மா சுவராஜ் பலமுறை குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் ஜெயந்தி எப்படி ஆதார் அட்டை பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்ன கதை
இலங்கையை சேர்ந்த சயந்தி ஆனந்தராஜ் என்ற ஜெயந்தி இலங்கை போர் காரணமாக 1989ல் இந்தியா வந்துள்ளார். அதன்பின் தமிழகத்தில் வாழ்த்து, இந்திய தமிழர் பிரேம் குமாரை 1992ல் திருமணம் செய்திருக்கிறார். அதன்பின் இங்கேயே வாழ்ந்து ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் பெற்று இருக்கிறார்.
இத்தாலி சென்றார்
அதன்பின் அந்த பாஸ்போர்ட்டை வைத்து அவர் இத்தாலிக்கு சென்று இருக்கிறார். அங்கு சில வருடம் இங்கு சில வருடம் என்று மாறி மாறி வசித்து இருக்கிறார். கடந்த 2007ல் இருந்து ஜூன் மாதம் வரை இப்படி பலமுறை இத்தாலிக்கும் இந்தியாவிற்கும் மாறி மாறி சென்றுள்ளார். கடந்த ஜூன் மாதம், அவரை விமான நிலையத்தில் கைது செய்த அதிகாரிகள், அவர் இந்தியர் இல்லை என்று கூறி கைது செய்தனர்.
இலங்கை பிரச்சனை
அதன்பின் அவர் உடனே இலங்கை அனுப்பட்டுள்ளார். ஆனால் அவரது இலங்கை பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் இலங்கை அரசு அவரை இந்தியா அனுப்பியது. இதையடுத்து, ஜெயந்தி அரசு கஸ்டடியில் வைக்கப்பட்டார். ஜெயந்தியின் மகள் திவ்யா வழக்கு தொடுத்தார்.
தீர்ப்பு என்ன
இந்த வழக்கில், ஆதார் அட்டை வைத்து இருப்பவர்கள் எல்லோரும் இந்திய குடிமகன்கள் இல்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி ஜெயந்தி ஆதார் கார்ட் வைத்து இருந்தாலும், அவர் முறையாக இந்தியா குடியுரிமை பெறவில்லை என்று கூறியுள்ளது. முறையாக இந்தியா அரசியலமைப்பு சட்டப்படி குடியுரிமை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளது.