செம்மண் கடத்திய லாரி... அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கத்து வீட்டில் புகுந்து விபத்து
சேலம்: சேலம் மாவட்டத்தில் செம்மண் கடத்திச் சென்ற லாரி ஒன்று, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளனது.
சேலம் மாவட்டம் பக்கநாடு, ஆடையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, செங்கல் சூளைகளுக்காக அதிகளவில் செம்மண் கடத்தப்படுவதாக புகார் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலுவம்பாளைம் வழியாக செம்மண் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சங்ககிரி அருகே உள்ள, காவேரிப்பட்டியை சேர்ந்த சேகர் (50) என்பவர் செம்மண் லாரியை ஓட்டி வந்துள்ளார்.

நள்ளிரவு 1 மணியளவில், சிலுவம்பாளையம் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, மின்கம்பத்தில் மோதி அர்த்தனாரி என்பவரின் வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கத்து வீடுதான் அர்த்தனாரியின் வீடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தினால் அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications