வயசான காலத்தில் இது தேவையா.. ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி கருத்து
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் காலம் முடிந்து விட்டது என்று நடிகரும், ரேடியோ ஜாக்கியுமான பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தின்போது பொதுக் கருத்துக்களை கூறி, தமிழ் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே.பாலாஜி. அதற்கு முன்பு சென்னை வெள்ள பாதிப்பின்போது நடைபெற்ற மீட்பு மற்றும் உதவி பணிகளையும் இவர் ஒருங்கிணைத்து பிரபலமாக உள்ளவர்.
தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் ரஜினிகாந்த்தின் அரசியல் செயல்பாடுகள் குறித்து தெரிவித்துள்ளார்.
25 வருடமாக காத்திருந்தேன்
ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளதாவது: நானெல்லாம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று, 25 வருடங்களாக காத்திருந்தேன். இப்போது எனது பொறுமையை இழந்துவிட்டேன்.
மாமனார் நிலை
நான் எனது 65 வயது மாமனாரிடம், 10 விஷயங்களை செய்ய சொன்னால், அதில் இரண்டு விஷயத்தைதான் அவரால் செய்ய முடிகிறது. அதைவிட அதிகமாக செய்ய அவரின் உடலிலும், மனதிலும் வலு இல்லை. எனவே தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதில்தான் எனது மாமனார் நேரத்தை செலவழிக்கிறார். நானும் அதைத்தான் விரும்புகிறேன்.
திட்டங்கள் எதிர்பார்க்க முடியாது
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஏற்படும் சங்கடங்கள் குறித்து நான் பேசவில்லை. ஆனால் அவரிடமிருந்து எந்த மாதிரி திட்டங்களை தமிழகம் எதிர்பார்க்க முடியும். இப்போது அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றுதான் நினைக்கிறேன்.
லாராவாகவே இருந்தாலும் இப்போது முடியாது
லாரா மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தார். ஆனால் இப்போது அவரால் அப்படி ஆட முடியுமா. அதுபோலத்தான் ரஜினி அரசியலும். நான் இப்போதும் ரஜினியின் ரசிகர்தான். அவரை முன்னுதாரணமாக கொண்டு வாழ நினைப்பவன்தான். இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.