அந்த நடிகர் என்னை ரகசிய திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்: நடிகை ஹேமலதா புகார்
சென்னை: நடிகர் இளையராஜா தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக நடிகை ஹேமலதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் வசித்து வரும் நடிகை ஹேமலதா(32) என்பவர் வியாழக்கிழமை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து நடிகர் இளையராஜா மீது புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கலைச் சேர்ந்தவள். நான் 3 தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஹைதராபாத்தில் எடிட்டிங் ஸ்டுடியோ வைத்துள்ளேன். சினிமா மற்றும் விளம்பர படங்களை தயாரித்து வருகிறேன். நடிப்பு, எடிட்டிங் ஸ்டுடியோ மூலம் சம்பாதித்ததை எல்லாம் சினிமா படத்தை தயாரித்து இழந்து நிற்கிறேன்.
என்னை விட வயது குறைவான இளையராஜா என்ற நடிகர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். முயல் என்ற படத்தில் நடித்துள்ள அவர் தற்போது அண்டாவை காணோம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நான் ஏற்கனவே காதல் பிரச்சனையில் சிக்கியுள்ளேன் இது எல்லாம் வேண்டாம் என்றேன். ஆனால் இளையராஜாவோ தனது காதலை ஏற்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றார். அதனால் அவரை காதலித்தேன். யாருக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள பூஜை அறையில் எனக்கு தாலி கட்டினார். கணவன், மனைவியாக வாழ்ந்ததில் நான் கர்ப்பமானேன். சினிமாவில் பெரிய ஆளாக வரும் வரை குழந்தை வேண்டாம் என்று கூறி கருவை கலைக்குமாறு கூறினார். நானும் அவ்வாறே செய்தேன்.
கருவை கலைத்த பிறகு என்னை ஒதுக்கிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய தயாராகிவிட்டார். அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அவரை என்னுடன் சேர்த்து வைக்குமாறு போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications