கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனு... 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது மகிளா நீதிமன்றம்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்து விழுப்புரம் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து, மரணத்திற்கு நீதிகேட்டு பெற்றோர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், சம்மந்தப்பட்ட அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்து, வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தையே உலுக்கிய இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், வீடியோ ஆதாரங்களை கொண்டும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் கைது செய்து வருகின்றனர். வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் ஆய்வாளர் தனலட்சுமி உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறைக்கு கொண்டு சென்றனர்

இந்நிலையில் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை ஜாமீன் கோரி, கடந்த 28 தேதி மனு செய்தனர். இந்த மனு மீது விசாரணை இன்று விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் வழக்கு விசாரணை வரும் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மகிளா நீதிமன்ற நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜாமின் வழங்க கூடாது என உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வி மற்றும் தாய்மாமன் செந்தில் முருகன் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications