வெற்றிவேல், கலைராஜன் உட்பட 6 தினகரன் ஆதரவு மா.செ.க்கள் பதவி பறிப்பு- ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி அதிரடி!
தினகரன் அணிக்கு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவுவதை தடுப்பது எப்படி என்று அதிமுக தலைமை கழகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.
சென்னை: தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேரை நீக்கியதும் அதிமுக ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தினகரன் அமோக வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்ற விதியை மாற்றி அமைத்து விட்டார் தினகரன்.
இந்நிலையில் தினகரன் ஒவ்வொரு சுற்றாக முன்னிலை வகித்து வரும்போதே அவருக்கு ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியிலிருந்து எம்எல்ஏக்கள் போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வேலூர் எம்பி செங்குட்டுவனும் நேற்று அடையாறில் உளஅள தினகரன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் செல்கள் பேட்டரி போட்ட மாதிரி எழுந்து நிற்பர் என்று தினகரன் ஒவ்வொரு முறையும் கூறிவருகிறார்.
இதை மனதில் வைத்துக் கொண்டு தினகரன் அணிக்கு யாரும் செல்லக் கூடாது என்பதை உறுதிப்படுத்த இன்று காலை 11 மணிக்கு அதிமுக தலைமை கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதில் முக்கிய நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தோல்வி குறித்து யாரும் ஊடகங்களில் பேசக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. அதிமுகவால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே ஊடகங்களில் பேச அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் ஒரு மணி நேரமாகியும் முதல்வர், துணை முதல்வர் தலைமை கழகத்துக்கு வராததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நடைபெற்றது. இதையடுத்து 12.15 மணி அளவில் இருவரும் வந்தவுடன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் ஆர்கே நகர் தோல்வி குறித்தும், தினகரனுக்கு ஆதரவாக உள்ளவர்கள் குறித்தும் பேசப்பட்டது. இதையடுத்து தினகரனுக்கு ஆதரவாக உள்ள 6 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக ஆலோசனை கூட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.