திமுக கூட்டணி தோற்க என்ன காரணம்? கிருஷ்ணசாமி, திருமாவளவன் விளக்கம்
சென்னை: அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒத்துழைப்பாலும், பணத்தாலும் வாங்கப்பட்டது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
திமுக தலவைர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சென்னையில் நேற்றிரவு நடைபெற்றது. அதில் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழாவில் கிருஷ்ணசாமி பேசுகையில், "திமுக கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்றுதான் எதிர்பார்த்திருந்தோம். போட்டியிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று நாங்கள் எண்ணாவிட்டாலும், 18 முதல் 20 தொகுதிகளை கைப்பற்றும் நம்பிக்கை இருந்தது.
அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்யப்போன இடங்களில் பொதுமக்கள் அடித்து விரட்டப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வந்தன. ஜெயலலிதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற மக்களிடம் எழுச்சி இல்லை. இதையெல்லாம் பார்த்து, உளவுத்துறையை வைத்து ஜெயலலிதா தேர்தல் நிலவரத்தை ஆய்வு செய்தார். அதிமுக இறங்குமுகமாக இருப்பதை உளவுத்துறை சுட்டிக்காட்டியது. எனவேதான் தமிழக தேர்தல் அதிகாரிகளை உடந்தையாக்கிக் கொண்டு வெற்றியை பறிக்க ஜெயலலிதா முடிவு செய்தார்.
ஜம்மு காஷ்மீரில் கலவரம் இல்லாத நாள் கிடையாது, வடகிழக்கு மாநிலங்களில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து கலவரம் இருந்து வருகிறது. அங்கெல்லாம் சட்டப்பிரிவு 144ன்கீழ் தடை உத்தரவை பிறப்பிக்காதபோது, அமைதி பூங்காவான தமிழகத்தில் தடை உத்தரவை பிறப்பித்தது தேர்தல் ஆணையம். ஏப்ரல் 20ம்தேதிவரை திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று இருந்த நிலை, அதன்பிறகு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததால் மாற்றப்பட்டது. அதிமுக வெற்றியை பெறவில்லை, வாங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் 144 தடையுத்தரவுக்கான விடையை திமுக கூட்டணி கண்டுபிடிக்காமல், அம்பலப்படுத்தாமல் விடக்கூடாது" என்றார்.
ஆனால் திருமாவளவன் பேசும்போது மாறுபட்ட கருத்தை கூறினார். ஊடகங்கள் மோடியை முன்னின்று பிரச்சாரம் செய்ததால்தான் பாஜக கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது என்றும், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அன்று சிஐடி காலனியில் கருணாநிதியை தான் சந்தித்தபோது, ஊடகங்களால்தான் திமுக தோற்கடிக்கப்பட்டது என்று கருணாநிதி கூறியதாகவும் திருமாவளவன் கூறினார்.
திருமாவளவன் பேசுகையில், "காங்கிரஸ், திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது நடந்த ஊழல்களுக்காக இரு கட்சிகளுக்கும் மக்கள் தண்டனை கொடுத்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. அப்படியானால் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் ஊழலை கடுமையாக எதிர்த்தன. அவையும் ஏன் தோற்றன? நாடு முழுவவதும் மோடி ஆதரவு பிரச்சாரம் நடைபெறுவது தெரிந்திருந்தும் கொள்கைக்காக பாஜகவுடன் சேரமாட்டேன் என்று கூறியவர் கருணாநிதி" என்றார்.