எடப்பாடி அறிவித்த அன்பரசன் தான் அதிமுக வேட்பாளர்.. ஓபிஎஸ் அணியினர் சுயேட்சைகள்.. ஜெயக்குமார் பேட்டி!
சென்னை : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், ஈபிஎஸ் அறிவித்த வேட்பாளரே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார், ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர் சுயேட்சையாகவே நிற்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், அதிமுகவும் போட்டியிட முடிவு செய்தது.

கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட, அதிமுக வேட்பாளராக அன்பரசனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் அதே புலிகேசி நகர் தொகுதியில், கர்நாடக மாநில அதிமுக மாணவர் அணிச் செயலாளர் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
புலிகேசி நகர் தொகுதியில் பாஜக சார்பில் முரளி, அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடும் நிலையில், ஓபிஎஸ் அணியும் வேட்பாளரை அறிவித்துள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், கோலார், காந்தி நகர் தொகுதிளுக்கும் ஓபிஎஸ் அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதனால், யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "அதிமுக வேட்பாளரை ஆட்சிமன்ற குழு கூடி தேர்வு செய்தது. ஆட்சிமன்றக் குழு முடிவின் படி புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார். அவர்தான் அதிகாரப்பூர்வ வேட்பாளர்.
ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்து இருப்பது பற்றி கவலை இல்லை. ஏனெனில் அவர் அதிமுகவில் இல்லை. கட்சியிலேயே இல்லாதவர் எப்படி கட்சி வேட்பாளரை அறிவிக்க முடியும்? அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கப்பட்டவருக்கே இரட்டை இலை சின்னமும் கிடைக்கும். ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுவார் என்று நினைக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications