ஆளுநர் கட்சிக்காரர் மாதிரி பேசுறாரே.. அறிக்கை அனுப்பி பேச சொல்றாங்களோ? கொளுத்திப்போட்ட செல்லூர் ராஜூ
மதுரை : தமிழ்நாடு ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார், ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பிரமாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. இதனையொட்டி வலையங்குளம் கருப்பசாமி கோயில் மைதானத்தில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சியின் பிரதிநிதி போல் பேசி வருகிறார். ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது. ஆளுநர் விவகாரத்தில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது.
ஆளுநர் அவராகவே பேசுகிறாரா? அல்லது வேறு எங்கும் இருந்து அவருக்கு அறிக்கை வருகிறதா? எனத் தெரியவில்லை. ஆளுங்கட்சியினர் ஆளுநர் பற்றி விமர்சிப்பதையும் ஏற்க முடியாது. ஆளுநர் - ஆளுங்கட்சி இடையேயான மோதலால் மக்கள் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன." எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய செல்லூர் ராஜூ, "எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மூன்றாம் தலைமுறையாக அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி வருகிறார். மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு மக்களவைத் தேர்தலுக்கு வெற்றி படிக்கட்டாக இருக்கும். " எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ரவி கடுமையாக சாடிப் பேசி வருகிறார். அண்மையில் கூட முதலீடுகளை ஈர்க்க சென்ற முதல்வரின் வெளிநாட்டு பயணத்தையும் ஆளுநர் ரவி விமர்சித்து இருந்தார்.

தமிழ்நாடு அரசால் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளது பற்றி திமுகவினர் விமர்சிக்கும் நிலையில், திமுகவின் கொள்கைக்கு எதிராக ஆளுநர் பேசி வருவதால் இரு தரப்புக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
திமுக மட்டுமல்லாது அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ஆளுநரை கடுமையாக விளாசி வருகின்றனர். இந்நிலையில் தான், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் ஆளுநரின் கருத்துகளை விமர்சித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications