ரஜினியின் பேச்சில் திடீர் மாற்றம்.. எதிர்பார்க்காத அதிமுக.. கலக்கத்தில் ஆளும்தரப்பு
நேற்று திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது ஆளும் அதிமுக தரப்பை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
Recommended Video
சென்னை: நேற்று திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது ஆளும் அதிமுக தரப்பை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
நேற்று சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதிக்கு திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்டாலின், ரஜினிகாந்த் மற்றும் பல திரையுலக பிரபலத்தினர் கலந்து கொண்டனர்.
அதில் ரஜினி, அதிமுக அரசுக்கு எதிராக பேசிய சில கருத்துக்கள், அதிமுக கட்சியை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ரஜினி வெளிப்படையாக முதல்வர் பழனிசாமியை எதிர்த்து பேசி இருக்கிறார்.
போராட்டம் செய்வேன்
நேற்று ரஜினி பேசியதில் முக்கியமான விஷயங்கள் என்று பார்த்தால், முதல்வர் பழனிச்சாமி என்ன ஜெயலலிதாவா, எம்ஜிஆரா, கருணாநிதிக்காக நானே போராட்டத்தில் குதித்து இருப்பேன், கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் முதல்வர் உடன் இருந்திருக்க வேண்டும், எம்ஜிஆர் புகைபடம் அருகே கருணாநிதியின் புகைப்படத்தை வைக்க சொன்னேன் என்று அரசுக்கு எதிராகவும், திமுகவிற்கு ஆதரவாகவும் நிறைய கருத்துக்களை கூறினார்.
கலக்கத்தில் அதிமுக
இது ஆளும்கட்சிக்கு பெரிய கலக்கத்தை உருவாக்கி உள்ளது. சேலம் சாலை தொடங்கி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு வரை ரஜினிகாந்த் அரசுக்கு ஆதரவாகவே பேசி வந்தார். முக்கியமான சமயங்களில் அரசுக்கு கைகொடுத்து உதவினார். ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அரசுக்கு எதிராக அவர் பேசியது, அதிமுகவில் உள்ள சில முக்கிய புள்ளிகளுக்கு பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக அதிமுகவிற்கு நெருக்கமானவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
பிரச்சனை
அதேபோல், அதிமுக வைத்திருந்த முக்கியமான கனவு ஒன்று இதனால் கலைந்து போய் இருக்கிறது. ரஜினியை அதிமுக தலைவராக ஏற்றுக்கொள்ளும் எண்ணத்திலேயே அந்த கட்சி தலைவர்கள் இருந்தனர். ஆனால், ரஜினி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் அரசுக்கு எதிராக பேசி இருக்கிறார். இதனால் அதிமுகவில் சேர ரஜினி ஒத்துழைப்பாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ரஜினியை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள ரகசிய அழைப்பு செல்வதாக, அரசியல் வட்டாரங்கள் ஏற்கனவே கிசுகிசு வந்தது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன
ரஜினி இப்படி பேசியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது, சில முக்கிய மக்கள் பிரச்சனையில் அரசுக்கு ஆதரவாக பேசியதால் ரஜினி மீது மக்கள் கோபமாக இருப்பதாக, அவரது முக்கிய தொண்டர்கள் ரஜினியிடம் தெரிவித்து இருக்கிறார்களாம். அரசியலுக்கு முழுமையாக வருவதற்கு முன்பே மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டாம், நடப்பது நடக்கட்டும் என்று வெளிப்படையாக ரஜினி இந்த முறை பேசி இருக்கிறார் என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கிறார்கள். எப்போது வருவார் எப்படி வருவார் என்று தெரியாமல் இருந்த ரஜினி, எப்போது என்ன பேசுவார் என்று தெரியாமல் இருக்கிறது.