முதலீட்டாளர்கள் மாநாடு... தொழிலதிபர்களை அதிமுக அரசு மிரட்டுகிறது: மு.க.ஸ்டாலின் புகார்
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வரும் தொழிலதிபர்களை தமிழக அரசு அதிகாரிகள் மிரட்டுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக தமிழக அரசு ரூ.100 கோடி செலவிடுகிறது. முதல்வர் ஜெயலலிதா மாநாட்டை தொடக்கி வைக்கிறார். இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து சுமார் 3,500 தொழில் முதலீட்டாளர்கள் வர உள்ளனர். இதில், 1000 பேர் வெளிநாட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், ‘முதலீட்டில் அதிக தொகையை காட்டுவதற்காக தொழிலதிபர்கள் மிரட்டப்படுவதாகவும், ரூபாய் 2 கோடி அளவு முதலீடு கூட ரூபாய் 100 கோடியாக கணக்கு காட்டப்படுவதாகவும்' குற்றம் சாட்டினார்.
சி.ஆர்.சரஸ்வதி மறுப்பு
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை அதிமுகவின் செய்தி தொடர்பாளரான சி.ஆர்.சரஸ்வதி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "யாரும் யாரையும் மிரட்ட முடியாது என குறிப்பிட்ட சி.ஆர்.சரஸ்வதி, மு.க.ஸ்டாலின் ஏதோ பேச வேண்டும் என்கிற காரணத்திற்காக பேசுகிறார். திமுக ஆட்சியில் தமிழகம் இருண்டு போய் இருந்தது. அதனை சரி செய்யவே அதிமுகவிற்கு 3 ஆண்டுகள் தேவைப் பட்டது' என்றார்.
மேலும், திமுக ஆட்சியில் செம்மொழி மாநாடு நடத்தியதால் யாருக்கு என்ன லாபம் எனவும் அவர் அப்போது கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications