ஜெ., நேர்காணல்... அம்மாவே நேரடியாக பேசினாங்க... மகிழ்ச்சியில் அதிமுகவினர்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒருநாள் இடைவெளிக்குக் பின்னர் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் இன்று மீண்டும் நேர்காணலை நடத்தி வருகிறார். எந்த வித இடைத்தரகர்களும் இன்றி ஜெயலலிதாவே நேர்காணல் நடத்தி வருவதால் விருப்பமனு அளித்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. எதிர்கட்சிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து கிடக்க ஆளும் அதிமுக தரப்போ அதிகமாக குஷியடைந்துள்ளது. அதே குஷியோடு நேர்காணலை நடத்தி வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
திமுக, பாமக, தமாகா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விருப்பமனு வாங்கிய கையோடு நேர்காணலை முடித்து விட்டன. ஆளும் அதிமுக தரப்போ இப்போதுதான் நேர்காணலை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவே நேரடியாக வேட்பாளர்களை வரவழைத்து நேர்காணல நடத்தி வருகிறார்.

கடந்த 6ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் திடீரென வேட்பாளர் நேர்காணல் நடந்தது. இதில், 5 பேர் மட்டுமே பங்கேற்றனர். அதன்பிறகு நேர்காணல் தொடர்ந்து நடத்தப்படவில்லை. சம்பிரதாயத்திற்கு நேர்காணல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்
இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்திருந்தவர்கள், நேர்காணலுக்கு வருமாறு ஞாயிற்ன்று இரவு அழைப்பு விடுக்கப்பட்டது.
முதல்கட்டமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்ட வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 2 வது நாளான செவ்வாய்கிழமையன்று காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கும் நேர்காணல் நடத்தப்பட்டது.
புதன்கிழமையான நேற்றைய தினம் நேர்காணல் நடைபெறவில்லை எனினும் எந்த நேரத்தில் அழைப்பு வரலாம் என்பதால் அனைவரும் ஒருவித பதைபதைப்புடன் ஹோட்டல்களில் காத்திருக்கின்றனர்.
இன்று மீண்டும் ஜெயலலிதா நேர்காணல் நடத்தி வருகிறார். இன்றைய நேர்காணலில் சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.
விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் மாவட்ட வாரியாக அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வெயிலில் காத்திருக்க வைக்கப்படாமல் போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ஏ.சி. அறையில் 50 பேராக அமர வைக்கப்படுகிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரிக்கிறார். அவர்களது குடும்ப பின்னணி, கட்சிப் பணியாற்றும் விதம், தொழில் உள்ளிட்டவை பற்றி விசாரிக்கிறார்.
மூத்த நிர்வாகிகளோ, உதவியாளர்களோ யாரும் இன்றி ஜெயலலிதாவே நேர்காணல் நடத்துகிறார். அவர்கள் அளிக்கும் பதில்களை தன் கைப்பட குறிப்பு எடுத்துக் கொள்கிறார்.
ஒவ்வொரு தொகுதிக்கும் எத்தனை பேர் விருப்பமனு கொடுத்துள்ளனர் என்பதை கையில் வைத்துக் கொண்டு அனைவரிடமும் விசாரித்து அவர்களில் இருந்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்கிறார். இதனால் நேர்காணலுக்கு சென்று திரும்பும் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நேர்காணலுக்கு சென்று வந்தவர்கள் சீட் கிடைத்து விடும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர். அம்மாவே எங்களை அழைத்து விசாரித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கட்சிப்பணி, தேர்தல் பணி பற்றி எங்களிடம் பரிவுடன் பேசி விசாரித்தார். எங்களால் நன்றாக பேச முடிந்தது. எங்கள் கருத்துக்களை கவனமாக கேட்டுக் கொண்டார். அம்மா யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று உறுதியளித்துவிட்டு வந்தோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நேர்காணலுக்கு தற்போதைய எம்.எல்.ஏக்களோ, முன்னாள் எம்.எல்.ஏ.க்களோ, முக்கிய நிர்வாகிகளோ, பிரபலங்களோ அழைக்கப்படவில்லை. கட்சியின் அடிமட்ட தொண்டனும், பிரபலம் இல்லாத புதுமுகங்களுமே அழைக்கப்பட்டனர்.
மகளிர் அணியினரும் அதிக அளவில் நேர்காணலுக்கு வந்திருந்தனர். எனவே இந்த முறை அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலில் புது முகங்களும், பெண்களும் அதிக அளவில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. அதிமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்களின் பொறுப்பு என்றும் ஜெயலலிதா கூறியுள்ளாராம்.
வேட்பாளர் அவர்தான் என்று முடிவாகிவிட்டார் ஆல் தி பெஸ்ட் , விரைவில் அறிவிப்பு வரும் போய் வேலையை பாருங்க என்று கூறி அனுப்புகிறாராம் ஜெயலலிதா.
அதிமுகவைப் பொறுத்தவரை, ஜெயலலிதா எடுக்கும் முடிவே இறுதியானது. அதனால், பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டும், மேலிட செல்வாக்கை பயன்படுத்தியும் காய் நகர்த்தியவர்களுக்கு 'சீட்' கிடைக்குமா, கட்சிக்காக பணியாற்றியவர்கள் அல்லது நேர்காணலுக்கு செல்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது, வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போதுதான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications