ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை கைது செய்க: செல்போன் டவர் ஏறி போராடிய ராஜீவ்காந்தி மயக்கம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, மோடி சந்திப்பைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைக் கண்டித்து சென்னை நந்தம்பாக்கத்தில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய அதிமுக வக்கீல் ராஜீவ்காந்தி மயக்கமடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 14ம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய இளங்கோவன், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக சில கருத்துகளை பதிவு செய்தார்.
இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் கொந்தளித்தனர். இரண்டு நாட்களாக உருவபொம்மையை எரித்தும், துடைப்பத்தால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரு தினங்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி அதிமுக வக்கீல் ராஜீவ்காந்தி என்பவர் காலை 7 மணிமுதல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிண்டி - போரூர் பிரதான சாலையில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறிய ராஜீவ்காந்தி தனது கையில் அதிமுக கொடியை ஏந்தியிருந்தார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டாவரே இருந்தார். இதனையடுத்து 9.30 மணியளவில் வக்கீல் ராஜீவ்காந்தி மயக்கமடைந்தார்.
இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் உடனடியாக செல்போன் டவரின் மீது ஏறி வக்கீல் ராஜீவ்காந்தியின் உடலில் கயிரைக்கட்டி இறக்க முயற்சி மேற்கொண்டனர்.
இதனிடையே அ.தி.மு.க தொண்டர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அவருடன் தீயணைப்பு வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். செல்போன் டவரில் அதிமுகவினர் போராட்டம் நடத்துவதைக்காண ஏராளமானோர் குவிந்துள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வீட்டருகே இந்த போராட்டம் நடைபெறுவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.