அதிமுக ஆட்சியில் தமிழகமே திவால்...: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சியில் அமர்ந்து மூன்றரை ஆண்டுகளிலேயே தமிழக அரசை திவாலாக்கிய பெருமைக்குரியவர்கள் அ.தி.மு.க.வினர் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தமிழக அரசின் நிதி நிலைமை பற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. நாளேடுகளிலும், வார இதழ்களிலும் அதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் ஆட்சியினரிடமிருந்து எந்தவிதமான விளக்கமோ, பதிலோ இதுவரை வரவில்லை.

ADMK made Tamilnadu government as popper: Karunanidhi

ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்குள்ளேயே தமிழக அரசை திவாலாக்கி, நிதி நிலையைத் தெருவிலே நிறுத்தக்கூடிய நெருக்கடியை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் தான் ஜெயலலிதா கட்சியினர். போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை கடந்த பதினைந்து மாத காலமாக நிறைவேற்றாமல் இருந்து, அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்த பிறகுதான் அழைத்துப் பேசவே முன்வந்தவர்கள் இந்த ஆட்சியினர்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஜெயலலிதா 139 அறிக்கைகளை 110வது விதியின் கீழ் படித்திருக்கிறார். 2013-2014 ஆம் ஆண்டில் மாத்திரம் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளில் 236 திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார் என்றும், ஆனால், அதில் 116 திட்டங்களுக்குத்தான் அரசாணைகள் வெளியிடப்பட்டன என்றும் இப்போது முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையிலேயே தெரிவித்தார். ஜெயலலிதா அறிவித்த எஞ்சிய 120 திட்டங்களுக்கான அரசாணைகளே பிறப்பிக்கப்படவில்லை என்ற தகவலே பன்னீர்செல்வம் மூலமாகத்தான் நமக்கு தெரிந்தது. அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், 236 திட்டங்களில் 5 திட்டங்களுக்கான பணிகள்தான் முடிக்கப்பட்டுள்ளன என்றும் பன்னீர்செல்வம் பேரவையிலே கூறினார்.

அப்படியென்றால் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 236 திட்டங்களில் இன்னும் 231 திட்டங்கள் முடிக்கப்படவில்லை. முடிக்கப்படாததற்குக் காரணம் அதற்கான நிதி ஆதாரம் இல்லை என்பதுதான். நான் முன்பே விளக்கமாக எழுதியது போல, கடந்த நான்காண்டுகளில் ஜெயலலிதா சட்டப்பேரவையில் படித்த 110வது விதியின் கீழான அறிக்கைகளிலே கூறப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடியே 93 லட்சம் ரூபாய். கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை படிக்கப்பட்டபோது, ஓர் ஆண்டுக்கான தமிழக அரசின் வருவாய் வரவுகள் என்று குறிப்பிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 389 கோடியே 89 லட்ச ரூபாய்.

அதாவது ஓராண்டில் தமிழக அரசின் வருவாய் வரவுகள் என்று குறிப்பிட்ட தொகை அளவுக்குச் சமமான அளவில் ஜெயலலிதா 110வது விதியின் கீழான அறிக்கையிலே மட்டும் திட்டங்களை அறிவித்திருக்கிறார் என்றால் நடப்பது என்ன அரசா? கேலிக்கூத்தா?

இப்போது அன்றாடம் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு போனஸ் கொடுக்க நிதி இல்லை என்றால் இதெல்லாம் யாருடைய குற்றம்? 10-12-2014 அன்று 110வது விதியின் கீழ் படிக்கப்பட்ட ஒருசில திட்டங்களையெல்லாம் நான் எடுத்துக்காட்டி, அவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு விட்டனவா? என்று இந்த அரசிடம் கேட்டிருந்தேனே, அதற்கு ஏதாவது இந்த அரசினால் பதில் கூற முடிந்ததா?

பருப்புக் கொள்முதலில் விதிமுறைகள் மீறப்பட்டதாக வந்த செய்திக்குப் பதில் எங்கே? புதிய தொழிற்சாலைகள் ஏதாவது உண்டா? வெளி மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு வந்து இங்கேயுள்ள தொழிலதிபர்களை எல்லாம் அழைக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இதுவரை மூடப்பட்ட நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகள் இன்னும் எத்தனை? இதுதான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா? தொலைநோக்குத் திட்டங்கள் என அறிவிக்கப்பட்டவை எல்லாம் என்னவாயிற்று?

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் அழைத்து முதலமைச்சர் நடத்தும் மாநாடு ஏன் இந்த ஆண்டு நடத்தப்படவில்லை? கடந்த ஆண்டு கலெக்டர்கள் மாநாட்டை நடத்தி, முதலமைச்சர் எத்தனையோ அறிவிப்புகளைச் செய்தாரே, அந்த அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயிற்று? அது குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்ற கோரிக்கைக்கு என்ன பதில்?" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+