இதுக்கெல்லாமா தற்கொலைக்கு முயல்வார்கள்....??
கும்பகோணம்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்பதில் தாமதம் ஏற்படுவதால் மனம் உடைந்து ஒரு அதிமுக பிரமுகர் தீக்குளித்து விட்டார்.
தற்கொலை செய்வது இப்போதெல்லாம் கிட்டத்தட்ட பேஷன் போல மாறி விட்டது. எதற்கெடுத்தாலும் தற்கொலை. அதுவும் இந்த பாழாய்ப் போன அரசியல்வாதிகளுக்காக தங்களது மனைவி, பிள்ளைகள், குடும்பம் ஆகியவற்றை மறந்து விட்டு தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள தில்லையம்பூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (55). அதிமுக ஊராட்சி செயலாளராக இருக்கிறார். ஊராட்சி மன்ற தலைவராகவும் முன்பு பணியாற்றி உள்ளார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், கோகிலா தேவி, நந்தினி ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ஜெயலலிதா விடுதலையானதால் சந்தோஷமாக இருந்து வந்த ரவிச்சந்திரன், அவர் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்க தாமதம் ஆவதைக் கண்டு மன வேதனையில் இருந்து வந்தாராம். நேற்று எப்படியும் ஜெயலலிதா முதல்வராகி விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். இதற்காக போஸ்டர்களையும் ஒட்ட ஆர்டர் கொடுத்திருந்தார். ஆனால் ஜெயலலிதா முதல்வராகவில்லை.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் ரவிச்சந்திரன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் கருகி அலறிய அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். போகும்போது ஆம்புலன்ஸில் அவர் அம்மா முதல்வராக வேண்டும். அதற்குத் தடை இருக்கக் கூடாது என்று அலறியபடி சென்றார்.
முன்னதாக ரவிச்சந்திரன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தில், அம்மாதான் நிரந்தர முதல்வர். அவர் தான் முதல்வர். அவர் மீண்டும் முதல்வராக எந்த தடையும் இருக்க கூடாது. நான் இறந்துவிட்டால் எனது உடலில் அதிமுக கொடியை போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும். எனது 2 குழந்தைகளையும் அம்மா ஆசிர்வாதம் பண்ணுவார் என்று கூறியிருந்தார். தற்போது தீக்காயத்தால் சிகிச்சை பெற்று வருகிறார் ரவிச்சந்திரன்.
இதுக்கெல்லாமா தற்கொலைக்கு முயல்வார்கள்....??