ஆவின் பால் கலப்பட வழக்கு: முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்திக்கு நெருக்கமான பிரமுகர் கைது!
சென்னை: ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் முக்கிய அரசியல் பிரமுகரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்திக்கு மிகவும் நெருக்கமான நபராவார். இந்த பால் கலப்பட விவகாரமே அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியின் பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்தது.
சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், போலீசார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவினுக்கு சென்று, ஐந்து நாட்களாக விசாரணை செய்தனர்.சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில், தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை அனுப்பியிருந்தனர்.
இவ்விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
வைத்தியநாதன் செல்வாக்கு
சைதாப்பேட்டை ஏரியாவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் அ.தி.மு.க-வில் சாதாரண உறுப்பினர். ஆனால் இன்றைக்கு அவருடைய வளர்ச்சி கண்டு அ.தி.மு.க-வில் இருப்பவர்களே ஆச்சர்யப்படுகிறார்கள். தொழில் அதிபர் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கும் இவரால்தான் இவ்வளவு பிரச்னையும்.
ஆவினில் செல்வாக்கு
ஆவினில் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கைப் பயன்படுத்தி உயர ஆரம்பித்தார். டேங்கர் லாரி மூலம்தான் பால் கொள்முதல் ஆகும். அப்படி லாரிகளை வாங்கி பால் கொள்முதல் செய்து வந்தார். பால் வைக்கவே தகுதி இல்லாத டேங்கர் லாரிகளை வைத்து பால் சப்ளை செய்து வந்தார். ஒரே பதிவு எண் கொண்ட லாரிகள் நிறைய வைத்திருந்தார். இப்படி 80 லாரிகளுக்கும் மேல் அவர் வைத்திருக்கிறார். இந்த லாரிகள் மூலம் திருடப்படும் பாலை தனியார் நிறுவனத்துக்கு விற்றுவந்தார். இப்படி ஆயிரக்கணக்கான லிட்டர் பால் தினமும் கொள்ளை போயின. இதற்கெல்லாம் ஆவின் அலுவலர்கள் சிலர் உடந்தையாக இருந்தார்கள்.
மாதவரம் மூர்த்தி
மாதவரம் மூர்த்தி பால்வளத் துறைக்குப் பொறுப்புக்கு வந்த பிறகு, அவர் எதையும் கண்டுகொள்ளாமல் இந்த நபருக்கு ஆதரவாக இருந்தார். பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளுக்கு அரசு பணம் தரும். இதற்கான தொகையை நிர்ணயிப்பது ஆவின் நிர்வாகம்தான். ஆனால், இந்தத் தொகையை இந்த நபர்தான் நிர்ணயித்து அதை மூர்த்தி மூலம் செயல்பட வைத்தார். இதுவே அமைச்சராக இருந்த மூர்த்தியை முன்னாள் அமைச்சராக மாற்றிவிட்டது.
பால் திருட்டு
டேங்கர் லாரியில் வரும் பாலை சுங்குவார்சத்திரம் போன்ற சில மறைவான இடங்களில் நிறுத்தி, பாலை திருடிவிட்டு அதே அளவுக்குத் தண்ணீரை கலந்துவிடுகிறார்கள். இப்படி தினமும் பல ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் கொள்ளை போயின. கடந்த மாதம் 4,000 லிட்டர் பாலை திருடியதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். வந்தவாசி ரோடு, கோவிந்தாபுரம் ஏரியாவில் வாகன சோதனை நடந்தபோது பால் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
தண்ணீர் கலப்படம்
கடந்த மாதம் திண்டிவனம் கோவிந்தாபுரத்தில், போலீஸ் நடத்திய சோதனையில் பாலில் தண்ணீர் கலப்படம் செய்தைக் கண்டுபிடித்தனர். இதை வைத்து வேலூர் ஆவின் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டு பேரை போலீஸ் கைது செய்தது. சென்னைக்கு வரும் பாலில் மட்டும் தினமும் 20 ஆயிரம் லிட்டருக்கும் மேல் தண்ணீர் கலப்படம் செய்து பால் கொள்ளை அடிக்கப்பட்டு வந்தது. இந்த விவரங்களை எல்லாம் முதல்வருக்கு சி.பி.சி.ஐ.டி அறிக்கையாக அனுப்பி வைத்துள்ளனர். தற்போது சீல்வைக்கப்பட்ட டேங்கர் லாரிகளில் பால் அனுப்பி வைக்கப்படுவதால் திருடவோ, கலப்படம் செய்யவோ முடியாத காரியம் என்கின்றனர் அதிகாரிகள்.
சிபிசிஐடி சோதனை
இதனிடையே ஆவின் பால் கலப்பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியநாதனின் வீடுகளில், சி.பி.சி.ஐ.டி . போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கட்சி பிரமுகரான வைத்தியநாதனுக்கு சொந்தமான பால் வண்டியி்ல், தான் தண்ணீர் கலப்பட பால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.