அதிமுக 130 இடங்களில் வெல்லும்!- இது தமிழருவி மணியன் கணிப்பு
நாகர்கோயில்: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 130 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார் தமிழருவி மணியன்.
காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "2016 சட்டப் பேரவைத் தேர்தலில் மதுவை மையமாக வைத்துத்தான் அரசியல் வரும் என ஏற்கெனவே காந்திய மக்கள் இயக்கம் கூறியது. இப்போது அதுதான் நடக்கிறது. இந்தப் போக்குக்கு அடித்தளம் அமைத்தது காந்திய மக்கள் இயக்கம்தான்.

திமுக தேர்தல் அறிக்கையில் மது விலக்கு என்றும், அதிமுக படிப்படியாக மது விலக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறி உள்ளனர். மதுக்கடைகளை தமிழ்நாட்டில் கொண்டு வந்து, தமிழ்ச் சமுதாயத்தை சீரழித்தது கருணாநிதி, ஜெயலலிதாதான்.
படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதாக ஜெயலலிதா சொல்வது சாத்தியப்படக் கூடியது. ஆனால், அதற்கான கால அளவை அவர் அறிவிக்க வேண்டும்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வளர்ச்சித் திட்டங்கள் இல்லை. திமுக விவசாய கடன், கல்விக் கடன் ரத்து எனக் கூறும் நிலையில், அதற்கான நிதி ஆதாரம் குறித்து விவரிக்கவில்லை.
மாற்று அரசாக மக்கள் நலக் கூட்டணியை முன் வைத்தவர்கள் விஜயகாந்த்தை முன்நிறுத்தியதன் மூலம் மாற்று அரசியலை குழிதோண்டிப் புதைத்துவிட்டனர். ஒரு கோடியே 20 லட்சம் புதிய வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என வைகோ கூறுகிறார். ஆனால், புதிய வாக்காளர்கள் விஜயகாந்தை முதல்வராக ஏற்கத் தயாராக இல்லை. இந்த உண்மை புரியவில்லையா வைகோவுக்கு?
இப்போதைய சூழலில் திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
எத்தனை கருத்துக் கணிப்புகள் வந்தாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது. 130 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைப்பார்," என்றார்.












Click it and Unblock the Notifications