ஓபிஎஸ் வராவிட்டால் கவலை இல்லை.. "யுபிஎஸ்"ஸிலேயே ஆட்சியை ஓட்ட இபிஎஸ் முடிவு!
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்த எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக மவுனம் கலைந்துள்ளார்.
சேலம்: 122 எம்எல்ஏக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள், அதிமுக நிர்வாகிகள் நம் பக்கம் இருக்கிறார்கள், யாரும் கவலைப்பட வேண்டாம், அதிமுக இரு அணி இணைப்பு குறித்து பேச்சு நடத்த ஓபிஎஸ் வராவிட்டாலும் பரவாயில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சேலத்தில் அதிமுக அம்மா அணி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பாக பேசியுள்ளார். நேற்றைய கூட்டத்தின் போது போஸ்டரில் ஜெயலலிதா படமும், எடப்பாடி பழனிச்சாமியின் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

அணிகள் இணைப்பு
அதிமுகவிலிருந்து தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் ஒதுக்கப்படுவார்கள் என்றும், இரு அணிகளையும் இணைக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமைச்சர்கள் அறிவித்தனர். பிறகு, இரு அணிகள் சார்பிலும் பேச்சுவார்த்தைக்குக் குழு அமைக்கப்பட்டது.

மாறி மாறி பேட்டி
இரு அணித் தலைவர்களும் பேச்சுவார்த்தைக் குறித்து முரண்பட்ட தகவல்களையே தெரிவித்து வந்தனர். மேலும் பன்னீர்செல்வம் அணியினர், 'ஜெயலலிதாவின் மரணத்துக்கு விசாரணை, சசிகலா மற்றும் குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனத் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்த எடப்பாடி பழனிச்சாமி, இப்போது முதன்முறையாக வாய் திறந்துள்ளார்.
இந்த நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற அதிமுக அம்மா அணி பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு பன்னீர்செல்வம் அணியினர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்றார்.

அந்தர் பல்டி
முதலில் நிபந்தனை இல்லை என்று கூறிய பன்னீர் தரப்பு தற்போது நிபந்தனை விதிக்கிறது. ஆட்சியும், கட்சியும் நம்மிடம் தான் உள்ளது. இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு சிலர் முட்டுகட்டை போடுகின்றனர் ஓபிஎஸ் அணியில் சிலர் அந்தர்பல்டி அடிக்கின்றனர்.

இணையாவிட்டாலும் பரவாயில்லை
90 சதவீதம் நிர்வாகிகள் நம் அணியில் தான் இருக்கின்றனர். இரு அணிகளும் இணையாவிட்டாலும் பரவாயில்லை. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பலத்தை நிரூபித்துள்ளோம். நிதி பற்றாக்குறையிலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.
என்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications