அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் உள்ளனர்… சோகத்தோடு சொன்ன செங்கோட்டையன்
அதிமுக எம்எல்ஏக்கள் ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்கள் என்று அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா சிறை செல்ல உள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒற்றுமையுடன் இருப்பதாக அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், சசிகலாவை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை குழுத் தலைவராக எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரி நேற்று ஆளுநரை சந்தித்தார்.
இந்நிலையில், இன்று சசிகலா பெங்களூரு சென்று சரணடைய வேண்டிய நிலையில் உள்ளார். இந்த பரபரப்புக்கிடையே எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டுக்கு அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன் வந்தார். அப்போது அவர், எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றுமையுடன் இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கூறியுள்ளோம் என்றும் ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் தெரிவித்த செங்கோட்டையனின் முகம் மிகவும் சோகமாகக் காணப்பட்டது.