ஜெ.மீண்டும் முதல்வராக இந்திரன் வழிபட்ட கோவிலில் அமைச்சர்கள் சிறப்பு யாகம்
சிதம்பரம்: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சீர்காழி அருகே திருக்காட்டுபள்ளியில் உள்ள ஆரண்யசுந்தரேசுவரர் கோயிலில் தமிழக அமைச்சர்கள் கே.ஏ.ஜெயபால்,டி.பூனாட்சி ஆகியோர் குடும்பத்தினருடன் இன்று 4மணி நேர சிறப்பு சிறப்பு ஹோமம் நடத்தினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் பதவியிழந்த ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அதிமுகவினர் பல்வேறு சிறப்பு யாகங்கள், பூஜைகளை செய்து வருகின்றனர்.
சீர்காழி அருகே திருவெண்காடு அடுத்த திருக்காட்டுபள்ளியில் அகிலாண்டேசுவரி சமேத ஆரண்யசுந்தரேசுவரர் கோயில் உள்ளது.இக்கோயிலில் முன்பு ஒரு காலத்தில் விருத்திகாசுரனை வதம் செய்ததால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து இந்திர பதவியை இழந்த இந்திரன், பிரம்மாவின் வழிகாட்டுதல்படி வழிபட்டு இழந்த இந்திரபதவியை மீண்டும் பெற்ற ஸ்தலம்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தார்.
அஷ்தரஹோமம்
அதன்படி கோயிலில் புனிதநீர் அடங்கிய 2கலசங்கள் வைத்து 9சிவாச்சாரியார்கள் இழந்த பதவியை மீண்டும் அடைந்து,புகழ்பெற செய்யபடும் சிறப்பு அஷ்தரஹோமம் செய்தனர்.
வெண்பட்டு,பட்டுபுடவைகள்,பழங்கள்,காய்கறிகள்,ஆகியவைகளை நெய்யுடன் கலந்து ஹோமகுண்டத்தில் விட்டு 4மணி நேரம் பூஜை நடைபெற்றது.
அமைச்சர்கள் யாகம்
மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால்,கதர்துறை அமைச்சர் டி.பூனாட்சி ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் ஹோம குண்டத்தின் முன்பு அமர்ந்து வழிபட்டனர்.
புனிதநீர் கலசங்கள்
பின்னர் புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் எடுத்துக்கொண்டு கோயிலை சுற்றிவந்து ஆரண்யேசுவர் சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
அதிமுகவினர் பங்கேற்பு
இந்த சிறப்பு வழிபாட்டில் மயிலாடுதுறை லோக்சபா தொகுதி எம்.பி ஆர்.கே.பாரதிமோகன், எம்.எல்.ஏக்கள் ம.சக்தி(சீர்காழி), எஸ்.பவுன்ராஜ்(பூம்புகார்),ஒன்றியக்குழு தலைவர் வே.பாரதி,ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம்(சீர்காழி), ஜெயராமன்(கொள்ளிடம்), மாவட்ட அவைதலைவர் வா.செல்லையன்,பேரூர் செயலர் போகர்.ரவி,நகர செயலர் ஏ.பக்கிரிசாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.வழிபாடு நிறைவடைந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காலபைரவர் கோவிலில்
இதேபோல் திருச்சி அருகே ஓயாமரியில் உள்ள காலபைரவர் குரு அரிச்சந்திரா கோவிலில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, சிறப்பு வேள்வி யாகம் நடந்தது. இதில், தமிழக அரசு தலைமை கொறடா மனோகரன், எம்.பி., குமார், எம்.எல்.ஏ பரஞ்சோதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிவாசன், உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications