"அம்மா" ஆபீஸை திறந்து வைத்த நேரம் சரியில்லையாம்... கணபதி ஹோமம் நடத்திய ஊராட்சி அலுவலகம்!
சிவகங்கை: முதல்வர் ஜெயலலிதா அலுவலகத்தைத் திறந்து வைத்த நேரம் சரியில்லை என்று கூறி கணபதி ஹோமம் நடத்திய கூத்து சிவகங்கை அருகே நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கடந்த மாதம் 16 ந்தேதி, முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த நேரம் சரியில்லை என்று கருதிய அதிமுக ஒன்றிய செயலாளர் அழகு சுப்பு மற்றும் அழகு சுப்புவின் மகளும் , ஊராட்சி ஒன்றிய தலைவருமான தனலெட்சுமி தலைமையில் அலுவலகத்தில் கணபதி ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு 3 மணிக்கு, ராமநாதபுரம் மாவட்டம் நைனார் கோவிலில் இருந்து, வேத விற்பனர்கள் வரவழைக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது .ஹோமம் நடந்த பொழுது முதல்வர் படம் அகற்றப்பட்டிருந்தாம். இந்த ஹோமத்தில் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் சிலரும், மற்றும் அலுவலக ஊழியர்கள் சிலரும் கலந்து கொண்டதாக தெரிகிறது.
முதல்வர் திறந்து வைத்த நேரம் சரியில்லை என்று கூறி அதிமுகவினரே கணபதி ஹோமம் நடத்திய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.