"எதிரிகளின்" கனவை தகர்க்க திடீர் தேர்தலை நடத்த "அம்மா" திட்டம்?
சென்னை: "அம்மா"வைக் கைது செய்ததால் மக்களிடையே நிலவும் கொஞ்சம் நஞ்ச அனுதாபத்தை வைத்து திடீர் தேர்தலை நடத்தி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாமா என்ற திட்டத்தில் அதிமுக இருப்பதாக பேசப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருப்பதால், அதிமுக மீதான மக்களின் அனுதாபத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் புதிய திட்டம் ஒன்றை கட்சி மனதில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

புதிய முதல்வர்...
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா சிறை சென்றுள்ள போதும், அவரை விடுவிக்கக் கோரி அதிமுகவினரோடு இணைந்து மற்ற துறையினரும் போராடி வந்தனர். இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் புதிய முதல்வராக பதவியேற்றார்.

விரைவில் தேர்தல்...
இது ஒருபுறம் இருக்க அக்கட்சியின் மனதில் வேறொரு திட்டமும் உள்ளதாம். அதாவது சட்டசபைத் தேர்தலை உடனே நடத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது தான் அது.

முன்கூட்டியே தேர்தல்...
கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. வரும் 2016ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முடியாது...
ஆனால், தற்போது 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, தண்டனைக் காலம் முடிந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட குறைந்தது 10 வருடங்களாவது ஆகும் என சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கவலை...
ஜெயலலிதாவுக்கு நேரடி அரசியல் வாரிசுகள் எதுவும் இல்லாத கட்சியான அதிமுகவின் எதிர்காலம் இதனால் கேள்விக் குறியாகும் நிலை நிலவுகிறது என கட்சி மேலிடம் கவலையில் உள்ளதாம்.

அனுதாப அலை...
எனவே, தற்போதுள்ள அனுதாப அலையைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம் என கருதுகிறார்களாம்.

பூர்வாங்கப் பணிகள்...
எனவே, விரைவில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றக் கட்சிகளின் திட்டம்...
இது ஒருபுறம் இருக்க, அதிமுகவால் தமிழகத்தில் உண்டாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மற்ற கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

அடுத்த 5 ஆண்டுத் திட்டம்....
இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகவும் ‘இந்த 5 ஆண்டுத் திட்டம்'இருக்கும் என அதிமுகவினர் நம்புகின்றனராம்.












Click it and Unblock the Notifications