ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி... மாரடைப்பில் மரணித்த அதிமுக தொண்டர்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரவி வருவதால் மனஅழுத்தத்திற்கு ஆளான அதிமுக தொண்டர் ஒருவர் மாரடைப்பில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கவலையடைந்துள்ளனர். கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான முத்துச்சாமி என்பவர், அதிமுகவின் தொண்டராவார். மீனம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் முத்துச்சாமி, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை தீவிர மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அவருக்கு மனைவியும், மகனும் ஆறுதல் சொல்லியும், ஜெயலலிதா உடல்நிலை குறித்து தொடர்ந்து வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஜெயலலிதா பற்றிய வதந்தி பரவவே, அவருக்கு திடீரென்று நேற்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications