பத்தாப்பு பரீட்சை முடிஞ்சதும் என்னாகப் போகுதோ... இருள் அப்பிய முகத்துடன் அதிமுகவினர்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் பல பகுதிகளில் மின்வெட்டு தலை தூக்க ஆரம்பித்துள்ளதால் வாக்கு கேட்டுப் போகும் அதிமுகவினர் மக்கள் கேட்கும் கேள்விகளைச் சமாளிக்க முடியாமல் இருண்ட முகத்துடன் பம்ம வேண்டிய நிலைக்குத் தள்ளப்படடு வருகிறார்கள்.
மின்வெட்டு நிலைமை உக்கிரமானால், வாக்குப் பதிவின்போது மக்கள் மாற்றி யோசித்து விடுவார்களோ என்றும் அதிமுகவினர் அஞ்சுகிறார்களாம்.
இடையில் காணாமல் போயிருந்த மின்வெட்டு தேர்தல் நேரம் பார்த்தா திரும்பி வர வேண்டும் என்றும் அதிமுகவினர் கையைப் பிசைகிறார்களாம். இப்போதைக்கு பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட பத்தாவது வகுப்பு பரீட்சை முடிந்ததும் பெரிய அளவில் மின்வெட்டு வரலாம் என்றும் பலர் பேசிக் கொள்வதால் அதிமுகவினர் இருள் படர்ந்த முகத்துடன் காணப்படுகிறார்களாம்.

கணக்கில் வராத சென்னை
தற்போதைய நிலையில் சென்னையில் மட்டும்தான் மின்வெட்டு என்பது பெரிய அளவில் இல்லை. ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் பரவலாக மின்வெட்டு விசிட் அடித்தபடி இருக்கிறதாம்.

அப்பப்ப போகுதுங்க.. வருதுங்க...
சென்னைக்கு அந்தாண்டை இருப்பவர்களிடம் மின்வெட்டு எப்படிப்பா இருக்கு என்று கேட்டால், இப்போதைக்கு பெரிய அளவில் மின்வெட்டு இல்லை என்றே சொல்கிறார்கள். அதேசமயம், அவ்வப்போது சொல்லாமல் கொள்ளாமல் கரண்ட் போய் விடுகிறது என்கிறார்கள்.

அரை மணி முதல் 4 மணி நேரம் வரை
பல பகுதிகளில் அரை மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கிறதாம்.

10ம் வகுப்பு பரீட்சைக்காக பார்த்துப் பார்த்து கட்...
தற்போது 10ம் வகுப்பு பரீட்சை தொடங்கியுள்ளதால் இரவு நேர மின்வெட்டு பெரும்பாலும் இல்லை. பகல் நேரத்தில் பார்த்து பார்த்து கட் செய்கிறார்களாம்.

கோவை பக்கம் பல மணி நேரமாமே...
அதேசமயம், திருப்பூர், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கம் போல பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லை என்று பேச்சு அடிபடுகிறது.

காவு வாங்கி விடுமா கரண்ட்
கடந்த 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது இந்த மின்வெட்டுதான் திமுகவுக்கு எதிராக விளையாடி விட்டது. அதன் பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் கூட மின்வெட்டு பிரச்சினை தீரவில்லை. மாறாக பல மடங்கு அதிகரிக்கவே செய்தது. தற்போது தேர்தல் காலம் என்பதால் இந்த முறை மின்வெட்டு நம்மைப் பழிவாங்கி விடுமோ என்று அஞ்சுகிறார்களாம் அதிமுகவினர்.

நிலைமை சரியாகிறது - மின்வாரியம்
அதேசமயம், இடையில் ஏற்பட்ட மின் உற்பத்திக் குறைவு சரியாகி வருவதாகவும், தற்போது நிலைமை பரவாயில்லை என்றும் மின்வாரியத் தரப்பில் சொல்கிறார்கள். பார்க்கலாம், 10ம் வகுப்பு பரீட்சை முடியட்டும்.. அதன் பின்னர்தான் உண்மை நிலவரம் தெரியும்.












Click it and Unblock the Notifications