EXCLUSIVE: கள்ளக்காதலை நியாயப்படுத்தவில்லை சுப்ரீம் கோர்ட்.. சரியா புரிஞ்சுக்கங்க மக்களே!
497 சட்டம் குறித்து சரியான புரிதல் மக்களுக்கு இல்லை.
சென்னை: திருமண பந்தத்தைத் தாண்டிய உறவுகள் கிரிமினல் குற்றமில்ல என்று உச்சநீதிமன்றம் சொன்னாலும் சொன்னது, ஆங்காங்கே ஆண்கள் சேட்டையை ஆரம்பித்து விட்டனர்.
முதலில் இந்த இ.பி.கோ 497 என்றால் என்ன? அந்த வகை சட்டம் வரையறுப்பது என்னவென்றால், கணவனோ, மனைவியோ தங்களின் "சம்மதம் இல்லாமல்" வேறொருவருடன் உறவு வைத்து கொண்டால் அது குற்றம், கண்டிப்பாக வழக்கு போடலாம். அதற்குரிய தண்டனையும் இதற்கு உண்டு.
[ ஐஎம்எப்பின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான இந்தியப் பெண்! சாதித்த கீதா கோபிநாத்! ]
உறவை முறிக்கலாம்
இந்த சட்டப் பிரிவை நீக்கித்தான் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருமணத்திற்கு வெளியேயான பாலியல் உறவு குற்றமில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது இ.பி.கோ 497-ஐ ரத்து செய்யப்பட்டது. அதே சமயம் அத்தகைய உறவால் பாதிக்கப்படும் கணவனோ, மனைவியோ தங்கள் மண உறவை முறித்து கொள்ள அதுவே போதும் என்றும் கூறப்பட்டது.
வழக்கு பதியலாம்
அதுமட்டும் அல்லாமல், இப்படிப்பட்ட கள்ள உறவால் கணவனோ அல்லது மனைவியோ பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டால், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதியலாம் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதைதான் நாம் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். இதுகுறித்து மனித உரிமைகள் குறித்த வழக்குகளை நடத்திவரும் வழக்கறிஞர் பாப்பா மோகனிடம் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக கருத்து கேட்டோம்.
தாய்வழி சமூகம்
அப்போது அவர் கூறியபோது, இந்த தீர்ப்பு குறித்து குழப்பமே தேவையில்லை. சுப்ரீம் கோர்ட் தெளிவாகவே கூறியுள்ளது. மேலெழுந்தவாரியாக பார்த்தால் இது கள்ளக்காதலுக்கு ஆதரவான தீர்ப்பு போல பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. நமது சமூகத்தில் காந்தர்வத் திருமணம் என்பது ஆதி காலத்திலேயே இருந்தது. நமது சமூகமே தாய்வழிச் சமூகம்தானே. ஆனால் அது காலப் போக்கில் எப்படி எப்படியோ மாறிப் போய் விட்டது. பெரியார் சுயமரியாதைத் திருமணத்தையும், காதல் திருமணத்தையும் ஆதரித்தார், வலியுறுத்தினார். அதை பின்னர் அண்ணா சட்டப்பூர்வமாக்கினார்.
சூழல்களை பொறுத்தது
தற்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பு என்பது பொதுமைப்படுத்தப்பட்ட விதி அல்ல. அது சூழல்களைப் பொறுத்தது. அதாவது திருமணமான பெண், ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்னொரு ஆணுடன் உறவில் ஈடுபடும்போது அந்த சூழலை வைத்து, இது தண்டனைக்குரிய குற்றச் செயல் அல்ல என்பதுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பின் சாராம்சம் ஆகும். மற்றபடி இது பொதுமைப்படுத்தப்பட்ட தீர்ப்பு அல்ல. கள்ளக்காதல் சரி என்றும் உச்சநீதிமன்றம் கூறவில்லை.
தற்காப்பு என்பதே இது
ஒருவனுக்கு ஒருத்தி என்பது உயர்ந்தபட்ச நாகரீகம். இதில் பாலின சமத்துவத்தை வலியுறுத்துகிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்பது எப்படியோ அதுபோலத்தான் ஒருத்திக்கு ஒருவன் என்பதும். இந்த பாலின சமத்துவம் வர வேண்டும் என்பதுதான் தீர்ப்பின் முக்கிய நோக்கம். 302வது செக்ஷன் என்பது கொலை செய்வோர் மீது சுமத்தப்படும் சட்டப் பிரிவு. அதேசமயம், தற்காப்புக்காக செய்யும் கொலையை கொலை என்று சட்டம் சொல்வதில்லை. அது தற்காப்புக்காக என்ற விதி விலக்கின் கீழ் வந்து விடுகிறது. அது போலத்தான். எந்த சட்டமும் அமலுக்கு வரும்போது நடைமுறை சிக்கல்களைச் சந்திக்கத்தான் செய்யும்"என்று பாப்பா மோகன் நீண்ட விளக்கம் அளித்தார்.
நீதிமன்றத்தின் கடிவாளம்
எனவே சட்ட அறிவு இல்லாமல் இந்த தீர்ப்பு எழுதப்படவில்லை என்பதை முதலில் மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும். யாரும் யாரோடும் உறவை வைத்து கொண்டு போகலாம் என்பது இந்த தீர்ப்பின் அர்த்தம் இல்லை. மானம் போகும், கலாச்சார சீரழிவுகள், பண்பாடு நாசமாகும், என்பதெல்லாம் வெற்றுக் கூச்சல்களே. நான் ஆம்பிளை, எப்படி வேணாம்னாலும் இருக்கலாம், எத்தனை பேர்கிட்ட வேணாலும் போகலாம் என்ற இறுமாப்பினைத்தான் நீதிமன்றம் கடிவாளம் போட்டு நிறுத்தி இருக்கிறது. அவ்வளவுதான்.
சுய ஆளுமை மீட்பு
இப்படி ஒரு தீர்ப்பு வழங்க காரணமே பெண்கள் தங்கள் கணவர்களுக்கு போக பொருளாக காட்சி தரக்கூடாது என்றும், சுயஆளுமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் எளிமையாக சொன்னால், சபரிமலை கோயில் தீர்ப்பு போல, பாலியல் சமத்துவத்தை வழங்கத்தான் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடைமுறை யதார்த்தத்தின் அடிப்படையில்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கணவர்கள் ஒன்றும் எஜமானர்கள் அல்ல என்று ஆண்கள் தலையில் ஒரு கொட்டு வைத்திருக்கிறது நீதிமன்றம்.
விவாகரத்து பெறலாம்
அதற்காக குடும்பங்கள் நாசமாகும், ஒழுக்கம் சீர்குலையும் என்ற அச்சமும் தேவையில்லை. காரணம், கள்ளத் தொடர்பு என்பது சிவில் சட்டப்படி குற்றச் செயலாகும். அது இன்னும் இருக்கிறது. அதோடு குடும்ப ரீதியாகவே பேசிக் கொள்ளலாம் என்றும் அவ்வாறு பேச்சுவார்த்தை ஒத்துவராத பட்சத்தில், சட்டப்படி விவாகரத்து பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நெறிக்கு உட்பட்ட நீதியே!
உண்மையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீயும் நானும் ஒன்னு.. இதை அறியாமல் நீ தவறு செய்தால் உன் வாயில் மண்ணு என்பதுதான் இதன் எளிமையான சாராம்சம். எனவே கள்ள உறவு என்பது தவறு இல்லை என்றோ, யார் யாருடன் வேண்டுமானாலும் கள்ளத்தனமாக உறவு வைத்துக் கொள்ளலாம் என்றோ தீர்ப்பு சொல்லப்படவில்லை என்பது முதலில் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தம்பதி உறவு என்பது பண்பட்டது... நெறிப்பட்டது... அது என்றுமே நீதிக்கு உட்பட்டதுதான்!! ஆனால் தற்போது ஆண்கள் சிலர், கோர்ட்டே சொல்லிருச்சு என்ற கணக்கில் தங்களது கள்ளக்காதலை நியாயப்படுத்தி பேசி வருவதுதான் கவலையை அதிகரிப்பதாக உள்ளது.