போலீஸ் டூ நீதிபதி... கடின உழைப்பாளி, கண்டிப்பானவர் இவர் தான் நீதிபதி ஷைனி!
2 ஜி அலைக்கற்றை வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ள 63 வயது நீதிபதி ஓ.பி.ஷைனி சட்டத்துறையில் கடின உழைப்பாளி என்ற பெயர் பெற்றவர்.
சென்னை : 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் விடுவித்து தீர்ப்பளித்துள்ள நீதிபதி ஓ.பி.ஷைனி யார் தெரியுமா. முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசா மற்றும் கனிமொழி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரின் கவனமும் நீதிபதி ஓ.பி.ஷைனி பக்கம் திரும்பியுள்ளது.
நாட்டின் இமாலய ஊழலாக பார்க்கப்பட்டது 2ஜி அலைக்கற்றை வழக்கு. முதலில் வருவோருக்கு முன் உரிமை என்ற அடிப்படையில் முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அ.ராசா அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பு என்று சிஏஜி அறிக்கை குறிப்பிட்டது.
இதன் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த மாதத்தில் மட்டுமே இந்த வழக்கின் தீர்ப்பு தேதி 3 முறை என மொத்தம் 6 முறை தீர்ப்பு தேதியானது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நீதிபதி ஓ.பி.ஷைனி அளித்த தீர்ப்பில் அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
ஷைனியின் தொடக்க காலம்
நீதிபதி ஓ.பி.ஷைனி 1981ம் ஆண்டு டெல்லி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக தன்னுடைய பணியைத் தொடங்கியுள்ளார். 6 மாதங்கள் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பின்னர் மேஜிஸ்திரேட்டுக்கான தேர்வு எழுதினார். அந்த ஆண்டில் அந்த தேர்வில் வெற்றி பெற்ற ஒரே நபர் இவர் தான்.
உச்சநீதிமன்றம் நியமனம்
ஹரியானா மாநிலத்தில் நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த ஷைனியின் கடின உழைப்பை கவனத்தில் கொண்டே அவர் இந்த வழக்கு விசாரணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011ம் ஆண்டு உச்சநீதிமன்றம் 2ஜி வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து அதன் நீதிபதியாக ஷைனியை நியமித்தது.
முக்கிய ஊழல் வழக்குகளை விசாரித்தவர்
தேசிய அலுமினியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் ஊழல் வழக்கு, காமன்வெல்த் ஊழல் வழக்கு உள்ளிட்ட வழக்குகளின் நீதிபதியாகவும் ஷைனி இருந்துள்ளார். காமன்வெல்த் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடியின் முக்கிய கூட்டாளிகளை கண்டறிந்து அவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்டரும் நீதிபதி ஷைனி தான்
நீதிக்காக எதிலும் சமரசம் செய்யாதவர்
வழக்கு விசாரணை தொடங்கிய போதே திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஜாமின் மனு விசாரணைக்கு வந்த போது, அவர் பெண் என்பதால் அவருக்கு ஜாமின் வழங்குவார் என்று கருதப்பட்டது. ஆனால் ஜாமினை தள்ளுபடி செய்து ஷைனி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதே போன்று அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கேள்வி எழுப்பவும் தயங்காதவராகவே ஷைனி இருந்துள்ளார்.
அதிகாரத்தை சரியாக பயன்படுத்தியவர்
இந்த வழக்கு தொடர்பாக 2013ம் ஆண்டில் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பார்தி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், ஹட்சிசனின் அசிம் கோஷ் மற்றும் ஸ்டெர்லிங் செல்லுலார் நிறுவனத்தில் ரவி ரூயா ஆகியோருக்கு சம்மன் அளித்து விசாரணைக்கு அழைத்தார். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் உடல்நிலையை காரணம் காட்டி சாட்சிப் பட்டியலில் இருந்து நீக்க விடுத்த கோரிக்கையையும் ஷைனி நிராகரித்தார்.