கூடங்குளத்தில் கட்சிகள் பிரசாரத்துக்கு பொதுமக்கள் தடை!
நெல்லை: இடிந்தகரையைத் தொடர்ந்து தற்போது கூடங்குளத்திலும் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு பொதுமக்கள் தடை விதித்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்ட குழுவினர் சமீபத்தில் ஆம் ஆத்மியில் இணைந்தனர். இந்த நிலையில் இடிந்தகரையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்கு ஊர் பொதுமக்கள் தடை விதித்துள்ளனர்.
இதை பின்பற்றி தற்போது கூடங்குளம் மக்களும் அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து உள்ளனர். ஆம் ஆத்மி கட்சிக்கும் இது பொருந்தும் என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக 25 கேள்விகள் அடங்கிய நோட்டீசை பொதுமக்கள் வினியோகித்து வருகிறார்கள். நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? என முதல் கேள்வி தொடங்குகிறது. தொடர்ந்து, எங்களை கைது செய்யும் அளவுக்கு நாங்கள் என்ன செய்தோம்?, அணு உலை பிரச்சினையில் எங்களோடு இணைந்து போராட தயாரா?
144 தடை உத்தரவு 18 மாதங்கள் தொடர்வதற்கு காரணம் என்ன?, சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் மீது 360- க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவதற்கு என்ன காரணம்? என்பன போன்ற 24 கேள்விகள் அந்த நோட்டீசில் இடம்பெற்று உள்ளன.
இறுதியில் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாரானவர்கள் மட்டும் வாக்குகள் கேட்டு வரவும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.