சசிகலா சிறைக்கு போனால் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற 'குற்றவாளி' நடராஜனும் முதல்வராக முடியாது!
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவை உச்சநீதிமன்றம் சிறைக்கு அனுப்பினால் அடுத்த முதல்வராக அவரது கணவர் நடராஜனையும் உட்கார வைக்க முடியாது என்பதால் கைபிசைந்து நிற்கிறதாம் மன்னார்குடி கோஷ்டி.
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டால் அடுத்த தமிழக முதல்வராக யாரை உட்கார வைக்கலாம்? சசிகலா கணவர் நடராஜனுக்கு ஃபெரா வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டன விதிக்கப்பட்டால் அவரும் முதல்வராக முடியாதே என புலம்பி வருகிறதாம் போயஸ் கார்டன் வட்டாரங்கள். அதேநேரத்தில் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வராக்கிவிடக் கூடாது என்பதில் மன்னார்குடி கோஷ்டி மிகவும் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்தார்.
இந்த விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்னும் ஒருவாரத்தில் வழங்க உள்ளது.
முதல்வராகும் சசிகலா
இதனிடையே ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். இதை பயன்படுத்திக் கொண்டு அதிமுகவை கைப்பற்றிய சசிகலா முதல்வர் பதவியில் அமரவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஓரிருநாட்களில் அவர் முதல்வராக பதவியேற்க கூடும்,
மீண்டும் சிறை?
இந்த நிலையில் தற்போது சசிகலா விடுதலைக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர உள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தால் சசிகலா மீண்டும் சிறைக்கு செல்ல நேரிடும்.
முதல்வராக நடராஜன்?
அப்படி சசிகலா சிறைக்கு போகும்நிலையில் முதல்வர் நாற்காலியில் யார் உட்காருவது? என்ற குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது மன்னார்குடி கோஷ்டி. சசிகலாவின் கணவர் நடராஜன் மீது லெக்சஸ் சொகுசு கார் இறக்குமதி செய்தது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்குகள் தொடர்ந்தன.
2 ஆண்டு சிறை
அமலாக்கப்பிரிவு ஃபெரா சட்டத்தின் கீழும் சிபிஐ தவறான தகவலை தந்ததாகவும் நடராஜன் மீது வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்கில் நடராஜன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார் நடராஜன்.
அப்பீல் நிலவரம்
அத்துடன் இவ்வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரியும் நடராஜன் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் நடராஜனின் 2 ஆண்டு சிறைத் தண்டனையை மட்டுமே நிறுத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டது. இதனால் நடராஜன் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற குற்றவாளியே.
முதல்வராக முடியாது..
ஆகையால் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற, நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட நடராஜனால் முதல்வர் நாற்காலியில் அமரவே முடியாது. ஏனெனில் 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற நபர் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆகையால் நடராஜனுக்கு வாய்ப்பே இல்லை. இதனால் சசிகலா சிறைக்குப் போனால் அடுத்த முதல்வர் யார் என்பதில் படுதீவிரமாக இருக்கிறதாம் மன்னார்குடி கோஷ்டி.