சண்டைகள்... சச்சரவுகள்... சுபமாய் முடிந்த நடிகர் சங்க தேர்தல் கிளைமேக்ஸ்
சென்னை: ஒருவாழியாய் நடிகர் சங்கத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி வாகை சூடியுள்ளது. கடந்த மூன்று மாதகாலமாக அனல் பறந்த நடிகர் சங்க தேர்தல்களத்தில் இதன் மூலம் அமைதிக்கு திரும்பியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 9 ஆண்டுகளுக்குப்பின்னர் நடந்த தேர்தல் என்பதால் அனல் பறந்தது என்னவோ உண்மைதான். 10 ஆண்டுகளாக நடிகர் சங்கத்தில் நிர்வாகிகளாக இருந்த சரத்குமார், ராதாரவி தலைமையிலான அணியும், மாற்றம் வேண்டும் என்று கூறி விஷால், நாசர், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் இணைந்த பாண்டவர் அணியும் இந்த தேர்தலில் மோதின.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கியது. ஞாயிறுகிழமை என்பதற்கான அறிகுறி சுத்தமாக மாறிப்போனது. போலீஸ் வாகனங்கள் காலை 5 மணிமுதலே ராதாகிருஷ்ணன் சாலையில் அணிவகுத்தன.
சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலை விட ஆதீத பந்தோபஸ்து போடப்பட்டது நடிகர் சங்க தேர்தலுக்கு. நடிகர், நடிகையர்கள் வாகனங்கள் தவிர பொதுமக்களின் வாகனங்கள் பள்ளி இருந்த பகுதி வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு போலீசார் குவிந்திருந்தனர்.
ஊடகவியலாளர்களின் அணிவகுப்பு ஒருபுறம் இருக்க... பிரபல நடிகர்கள் காலை 7 முதலே அணிவகுத்தனர். சூடான பேட்டிகள்... சுவையான விவாதங்கள்... தொலைக்காட்சிகளில் நேரலைகள் என அனல் பறந்தது தேர்தல்.
ஏன் இத்தனை பேர் வர்றீங்க... ஒரே சேனல்ல இருந்து இத்தனை பேரா? செல்லாது செல்லாது... என்று ஒரு காக்கி மறிக்க...சார், நாங்க மாத்தி விட வந்திருக்கோம் ஷிப்ட் மாறணும் என்று சொன்னாலும் விட மறுத்த காக்கியை முற்றுகையிட்டனர் சில செய்தியாளர்கள். அரைமனதாய் பெயரையும், ஊடக நிறுவனத்தின் பெயரையும் குறித்து வைத்துக்கொண்டு உள்ளே அனுப்பினார்கள்.
நாம் உள்ளே போனபோது... கார்டு இருக்கா?.... கார்டு இருக்க என்று கேட்க? ஓ..... இருக்கே என்று கூறிவிட்டு உள்ளே போக கையில் ஓரு நோட்டீஸை கொடுத்தார்கள். அதில் சரத்குமார் அணிக்கு ஓட்டுபோடுங்க என்று இருந்தது.
அடடா... அவங்க கேட்டது நடிகர் சங்க உறுப்பினர் கார்டு என்று அப்புறம்தான் தெரிந்தது. நல்ல வேளை மீடியா கார்டை காட்டியிருந்தால் அந்தப்பக்கம் போங்க.... அப்புறம் வாங்க என்று விரட்டியிருப்பார் போலீஸ். ஒரு வழியாக உள்ளே சென்ற போது, போலீஸ் தலைகளும், செய்தியாளர்களின் தலைகளும்தான் அதிகம் காணப்பட்டது. அம்பிகா, ராதா, வென்னிற ஆடை நிர்மலா என வரிசையாக ஓட்டுப் போட வர ஆரம்பித்தனர்.

வாக்கு வேட்டை
சரத் ஒருபக்கம் செய்தியாளர்களை சந்திக்க, ராதாரவி ஒருபக்கம் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். பாண்டவர் அணி எங்கேப்பா யாரையும் காணோமே என்று நம் கண்கள் தேட வந்தார் கார்த்தி. ஓட்டுப்போட வந்தவர்களை சுறுசுறுப்பாக கவனித்துக்கொண்டிருந்தார் கார்த்தி.

ரஜினி-கமல்
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் முதல் விஜய், ஆர்யா, சூர்யா உள்ளிட்ட இளம் தலைமுறை நடிகர்கள் வரை ஆர்வமுடன் வாக்களித்தனர்.

மன்சூர் அலிகான்
12 ரூபா கட்டாம போனதுக்கு நீக்கிட்டாங்களே... பாண்டவர் அணிதான் நிச்சயம் ஜெயிக்கும் என்று சில தினங்களுக்கு முன்பு பேட்டி தட்டிய மன்சூர் அலிகான், ராதாரவியுடன் நின்று பேசிக்கொண்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அஜீத், அரவிந்த் சாமி
வேதாளம் படப்பிடிப்பின் போது காலில் காயம் பட்டதால், நடிகர் அஜீத்குமாரும், அவரது மனைவி ஷாலினியும் ஓட்டு போட வரவில்லை. நடிகர் அரவிந்தசாமி, நடிகையர் தமன்னா, ஹன்சிகா, கமல் மகள் ஸ்ருதி ஹாசன், இலியானா உள்ளிட்ட, பலரும் ஓட்டு போடவில்லை.

நாட்டாமை பேர மாத்து
நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று ரஜினி சொல்ல, கமல்ஹாசனோ, இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்றார். பிறகு வந்த கவுண்மணியோ, வெறுமனே நடிகர் சங்கம் என்று வைத்தால் போதும் என்று கூறி இதுக்குத்தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா என்று நிரூபித்தார்.

பாண்டவர் அணி
இந்த தேர்தலில், நடிகர் சங்கத்திற்கு தலைவர், பொதுச்செயலாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் என 25 பதவிகளை விஷால் அணியினர் கைப்பற்றியுள்ளனர்.

உற்சாக கொண்டாட்டம்
விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினரின் அமோக வெற்றியை அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். நள்ளிரவில் நடுரோட்டில் உற்சாகமாக குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேர்தலில் வெற்றி பெற்றதும், நடிகர் கார்த்தி, விஷாலை ஆரத்தழுவி உற்சாகமாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தோல்விக்கு தலைவணங்குகிறோம்
தேர்தலில் தோல்வியடைந்த சரத்குமார் அணியினர், தோல்வியை தலை வணங்கி ஏற்பதாக தெரிவித்துள்ளனர். வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துக்கள் என்றார் சரத்குமார்.

விஷால் தம்பிக்கு வாழ்த்து
விஷால் பட்ட சிரமத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று கூறிய ராதாரவி தோல்வியை தலை வணங்கி ஏற்கிறேன் என்றார். போட்டி என்றால் வெற்றி, தோல்வி என்று ஏதாவது ஒன்று நடக்கும் அது நடந்திருக்கிறது என்றார் விஜயகுமார்

கிளைமேக்ஸ் சுபம்
எப்படியோ மாறி மாறி பேட்டி கொடுத்து போர்களமாக மாறிய நடிகர் சங்கத்தேர்தலின் கிளைமேக்ஸ் ஒருவழியாக சுபம் கிளைமேக்ஸ் ஆக முடிந்துள்ளது. மாற்றத்தை விரும்பி நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் பாண்டவர் அணிக்கு வாக்களித்துள்ளனர்.

முதல் கையெழுத்து
தேர்தல் அறிக்கையில் பாண்டவர் அணியின் விஷால் சொன்னது போல முதல் கையெழுத்து, நலிவடைந்த உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5000 தர கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications