விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு.. தொடரும் சோதனையால் விழிபிதுங்கும் அமைச்சர்!
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையின் போது சிக்கிய ஆவணங்களை சரிபார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 5 கோடி ரூபாய் பணம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து விடாது கருப்பாய் அவரது கல்குவாரி மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் தொடர்ந்தன. இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி நேரில் விசாரித்தனர்.
இன்று மீண்டும் சோதனை
இதேபோல் கடந்த 5ஆம் தேதி விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள்ளேயே புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் இன்றும் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
பூட்டிக்கிடந்த அறையில் சோதனை
பெண் அதிகாரி தலைமையில் 4 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. ஏப்ரல் 7ம் தேதி பூட்டிக்கிடந்த அறையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆவணங்கள் சரிபார்ப்பு
மேலும் ஏற்கனவே நடத்தப்பட்ட ரெய்டின் போது சிக்கிய ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறையின் தொடர் கிடுக்கிப்பிடி சோதனையில் சிக்கியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
அதிகரிக்கும் நெருக்கடி
ஏற்கனவே அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அவரது வீட்டில் மீண்டும் சோதனை நடத்தப்படுவது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.