கந்துவட்டிக்காரர்களால் குழந்தை கடத்தலா... நெல்லையில் மீண்டும் ஒரு பயங்கரம்!
நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டிக்காரர்களினால் குழந்தை கடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி : கந்துவட்டியை திருப்பித் தராததால் துப்புரவுத் தொழிலாளியின் 4 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக நெல்லையில் பாதிக்கப்பட்டவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கந்துவெட்டி கொடுமை தாங்க முடியாமல் தீக்குளித்து உயிரிழந்தனர். இதனையடுத்து நெல்லை உள்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கந்துவட்டிக்கு எதிராக புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கந்துவட்டி சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் நெல்லையில மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சேர்ந்தமரம் தன்னூத்து கிராமத்தை சேர்ந்த துப்புரவுத் தொழிலாளியான மணிகண்டன் ரூ. 1 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கந்துவட்டி கொடுத்தவர்கள் மணிகண்டனின் மகன்கள் கிருஷ்ணன், அஜித் மற்றும் அவரது பெரியப்பா மகன் குருசாமி, முருகள் ஆகியோரை கடத்திச் சென்றதாகத் தெரிகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மணிகண்டன் சேர்ந்தமரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையில் வாடும் நெல்லை மாவட்ட மக்களை குறி வைத்து நடத்தப்படும் கந்துவட்டி கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications