பிரிந்தவர்களுக்கான பிளான் பி.. பாஜகவுக்காக தூது சென்ற ஜிகே வாசன்.. எடப்பாடியுடன் நடந்த சந்திப்பு!
சென்னை: பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின் பாஜகவின் பார்வை தமிழ்நாடு பக்கம் திரும்பி இருக்கிறது. அதனை உறுதிபடுத்தும் விதமாகவே பீகாரில் முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்பதற்கு ஒருநாள் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்து சென்றுள்ளார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியை கூடுதல் வலிமைப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது.
இதனிடையே பிரதமர் மோடியை கோவையில் எடப்பாடி பழனிசாமி வரவேற்ற போது, அவருடன் ஜிகே வாசன் நின்றிருந்தார். எஸ்பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் இருந்த போதும், ஜிகே வாசன் அருகில் நிற்க வைக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன. ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பாக தான் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஜிகே வாசன் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசித்திருந்தார்.

அப்போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் பாஜக அனுப்பியே ஜிகே வாசன் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒரு குடைக்குள் கொண்டு வர பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
அப்போதுதான் தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்த முடியும் என்று பாஜக நம்புகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஒருபோதும் ஒபிஎஸ், சசிகலாவை சேர்க்க முடியாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். இவரை சமாதானம் செய்யவே செங்கோட்டையன் மூலமாக பாஜக காய்களை நகர்த்தியது. அவர் வெளிப்படையாகவும், கெடு விதித்து நேரடியாகவும் பேசி பார்த்தார்.
ஆனால் செங்கோட்டையன் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தற்போது ஜிகே வாசன் மூலமாக பாஜக தலைமை தங்களின் திட்டங்களை அரங்கேற்ற முயற்சிகள் மேற்கொள்வதாக தெரிய வந்துள்ளது. சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை ஜிகே வாசன் சந்தித்த போது, பிரிந்தவர்களை அதிமுகவில் சேர்க்கவில்லை என்றாலும் பிரச்சனையில்லை.
அவர்களை ஒரு குடையின் கீழ் இணைத்து தனி அணியாக என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இதனை பிரதமர் மோடி மூலமாக வலியுறுத்தவே கோவைக்கு எடப்பாடி பழனிசாமியுடன் ஜிகே வாசனும் உடனிருந்திருக்கிறார். ஆனால் கோவை வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், மோடி நலம் விசாரித்துவிட்டு புறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அடுத்ததாக டிசம்பர் மாதத்தில் அமித்ஷா தமிழ்நாடு வரும் போது, இந்த விவகாரம் தொடர்பாக பேசலாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் அளிக்கப் போகிறார், தேர்தலுக்கு முன் என்னென்ன காட்சிகள் அரங்கேறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications