தமிழகத்தின் திருமகளே வருக.. ஜெ. அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக பேனர் வைத்த அதிமுகவினர் !
தூத்துக்குடி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் அதிமுக தொண்டர்கள் பேனர் வைத்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அதிமுகவின் அதிகாரம் வாய்ந்த பொறுப்பான அக்கட்சியின் பொதுச்செயலாளர் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அதேசமயம், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக வரவேண்டும் என அக்கட்சியினர் பலரும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர். இதனிடையே சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தெடுக்கக்கூடாது என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதைனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அதிமுகவுக்கு தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேனர்கள் வைத்து வருகின்றனர். தீபாதான் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தீபாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர். அதில், அம்மாவின் மருமகளே தமிழகத்தின் திருமகளே அதிமுகவை காக்க அம்மா (எ) ஜெ. தீபாவை இருகரம் கூப்பி வரவேற்கிறோம் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா, தீபாவின் படமும் இடம் பெற்றுள்ளது. அதிமுக தொண்டர்கள் தீபா ஆதரவு பேனர் வைத்துள்ளதால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.