இன்னோவா காரை ஒப்படைக்காவிட்டால்.. நாஞ்சில் சம்பத்தை மிரட்டிய அதிமுக
இன்னோவா கார் விவகாரத்தில் நாஞ்சில் சம்பத்தை அதிமுக மிரட்டியுள்ளது.
சென்னை: இன்னோவா காரை ஒப்படைக்காவிட்டால் போலீசில் புகார் கொடுப்போம் என தினகரன் அணி பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை அதிமுக மிரட்டியிருக்கிறது.
தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத், ஆர்கே நகர் தேர்தலைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் தினகரன் தனிக் கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனால் நாஞ்சில் சம்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிமுக தலைமை அலுவலக நிர்வாகி ஒருவர், இப்ப நீங்க இருப்பது வேற கட்சி, அதனால் ஒழுங்காக இன்னோவா காரை திருப்பி கொடுத்துவிடுங்கள்.
இல்லையெனில் காரை திருடியதாக போலீசில் புகார் செய்வோம். போலீஸ் உங்களை கைது செய்யும் என எச்சரித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த நாஞ்சில் சம்பத்தும் பதிலுக்கு கடுமையாக பேசினார்.
பின்னர் தமது ஆதரவாளர்கள் மூலமாக அடுத்த நாளே இன்னோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டார் நாஞ்சில் சம்பத். புதுவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் இச்சம்பவம் உண்மை எனவும் கூறினார்.