அதிமுக பொதுச்செயலாளர் யார் என்று தீர்மானிக்கவில்லை - இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி
அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்று இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது சசிகலாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு தேர்தல் ஆணையம் இவ்வாறு பதில் அளித்துள்ளது.
சுவாமிநாதன் தனது கேள்வியில், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்றும், அவர் எப்போது யாரால் நியமனம் செய்யப்பட்டார் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் துணைப் பொதுச்செயலாளர் யார் என்பது உள்ளிட்ட 5 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் அணிகளுக்கு இடையே பூசல் நீடிப்பதாகவும் பதிலளித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் சசிகலாவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா பொதுச்செயலாளர் இல்லை என்றால் அவரால் நியமனம் செய்யப்பட்ட துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதவிக்கும் மதிப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.