குஷ்புவின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: அதிமுக மகளிர் அணியினர் தாக்கு
சென்னை: ஒரு வார்த்தை வெல்லும்... ஒரு வார்த்தை கொல்லும் என்று கூறுவார்கள். தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறிய ஒரு வார்த்தைதான் இன்றைக்கு அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.
மோடி - ஜெயலலிதாவின் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மன்னிப்பு கேட்கும் வரை தமிழகம் முழுவதும் போராட்டதை நடத்த திட்டமிட்டுள்ளனர் அதிமுகவினர். மூன்றாவது நாளாக திருநெல்வேலி தொடங்கி சென்னை வரை அதிமுகவினர் நடத்தும் போராட்டத்தினால் பதற்றம் நீடிக்கிறது.
உருவபொம்மை எரிப்பு
திருநெல்வேலியில் எம்.பி. விஜிலா சத்யானந்த் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், உருவ பொம்மையை எரித்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
குஷ்புவின் பின்னால் ஒளிவதா?
நடிகை குஷ்புவின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் இளங்கோவன் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். தமிழ்ப் பெண்களின் கலாச்சாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இழிவான கருத்துக்களை வெளியிட்ட நடிகை குஷ்புவை அருகில் வைத்துக் கொண்டு அவரை முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு இணையாகப் பேசி தமிழர்களை தலைகுனிய வைத்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்றும், அவருக்கு முதல்வர் ஜெயலலிதா பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்றும் அதிமுக மகளிர் அணியினர் கொந்தளிப்புடன் கூறினர்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டோம் என அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஈரோட்டில் முற்றுகை
ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வீட்டினை ஏராளமான அதிமுகவினர் முற்றுகையிட முயற்சி செய்தனர். முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூராக பேசிய இளங்கோவன் ஈரோட்டிற்குள் நுழைய முடியாது என்றும் அதிமுகவினர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.