அதிமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும்... நாங்க கூட்டணியில் இருப்போம்... அடித்துச் சொல்லும் சரத்குமார்
சென்னை: தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சிக்கு நிதி பெறுவதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று வருகிறேன். அந்த வகையில் இன்று கோவை வந்துள்ளேன். அடுத்து திருப்பூர், சேலம் செல்ல உள்ளேன் என்றார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பல்வேறு தடைகளை உடைத்து மீண்டும் முதல்வராக பதவி ஏற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மக்கள் நலனில் அக்கறை எடுத்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வார். அ.தி.முக.வினரின் வேண்டுதல்கள் பலித்துள்ளது. அதன் மூலம் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதை எதிர்த்து தே.மு.தி.க. மேல்முறையீடு செய்துள்ளது. தி.மு.க. மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. மேல்முறையீடுகளை கண்டு ஜெயலலிதா அஞ்ச மாட்டார்.
எதிர்க்கட்சிகள் மேல்முறையீடு செய்தாலும் அந்த வழக்கை எதிர் கொண்டு ஜெயலலிதா வெற்றி பெறுவார். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பூரண மதுவிலக்கை நானும் வரவேற்கிறேன். வருவாய் ஆதாரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
'மேக் இன் இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். இந்திய பொருட்களின் தரம் பற்றி வெளிநாட்டினரும் அறிந்து கொள்ளும் வகையிலும், வெளிநாடுகளுடனான நட்புறவு வளரும் வகையிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். பொதுவாக கடந்த ஓராண்டில் மோடி ஆட்சி சிறப்பாக இல்லை என கூறுகிறார்கள். எனது கருத்தும் அதுதான்.
பாஜக-அ.தி.மு.க. இடையே மறைமுக உறவு இல்லை. பாஜக தலைவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பேசுகிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து.
2016 தமிழக சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கும். அந்த தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று இப்போதே கூட்டணிக்கு துண்டு போட்டு வைத்துவிட்டார் சமக தலைவர் சரத்குமார்.












Click it and Unblock the Notifications