ஜெயலலிதா இருந்த போதே எழுந்த சர்ச்சை.. அதிமுகவும் அஜித் குமாரும்.. அரசியலுக்கு வருவாரா தல?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்தே அதிமுகவிற்கு அஜித் குமாருக்கும் நெருங்கிய தொடர்பும், பல குறிப்பிடத்தகுந்த விஷயங்களும் நடந்து இருக்கிறது.
Recommended Video
டெல்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்தே அதிமுகவிற்கு அஜித் குமாருக்கும் நெருங்கிய தொடர்பும், பல குறிப்பிடத்தகுந்த விஷயங்களும் நடந்து இருக்கிறது.
அது அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் மற்றும் முதல்வர் ஜெயலலிதா மறைந்த சமயம். உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஏராளமான பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் திரை உலக பிரபலங்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அஜித் எங்கு
ஆனால் அப்போது அஜித் தமிழ் நாட்டில் இல்லை. அவர் விவேகம் படம் ஷூட்டிங்கில் இருந்தார். சிறுத்தை சிவா இயக்கத்தில் பல்கேரியாவில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதனால் அந்த ஷூட்டிங் முடிந்த பின் அஜித் நேரடியாக மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தோடு அவர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அந்த அளவிற்கு அஜித் ஜெயலலிதா மீது மரியாதை வைத்து இருந்தார்.

இன்னொரு பக்கம்
கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு, 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு அஜித் பேசும்போது, இதுபோன்ற விழாக்களில் எங்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி வரவழைக்கின்றனர் என்றார். அப்போது அஜித்திற்கு அதிமுக சப்போர்ட் செய்தது. இந்த சர்ச்சை ஓயவே பல வருடங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.

அரசியல் இல்லை
ஆனாலும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அஜித் உடன் அன்பாகவே இருந்திருக்கிறார். அதே சமயம் அஜித் அரசியலில் இருந்து விலகி இருந்தார். தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் அரசியலில் ஈடுபடுகிறார் என்று தெரிந்ததும் அதை கலைத்தார். பாஜக தன்னை கட்சிக்குள் இழுக்க பார்க்கிறது என்று தெரிந்ததும், வெளிப்படையாக் அறிக்கை விட்டு, தன்னை விலகிக் கொண்டார்.

அதிமுக எப்படி
ஆனால் அரசியலை விட்டு விலகி இருந்தாலும் அவர் பலமுறை இதற்கு முன்பே அதிமுகவுடன் சேர்த்து வைத்து பேசப்பட்டு இருக்கிறார். ஆம் நடிகர் அஜித்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பலமுறை பாராட்டி இருக்கிறார். ஜெயலலிதா அஜித்திற்கு பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கினார்.

முக்கிய பொறுப்பு
அதிமுகவினர் பலர் அஜித்தை நேரடியாக பாராட்டி இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை என்று சில செய்தித் தாள்கள் கட்டுரைகள் கூட வெளியிட்டது. அதிமுகவில் அஜித் சேர போகிறார் என்று செய்திகள் வந்தது. அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க போகிறார் என்றும் செய்திகள் வந்தது.

இருவரும் சந்திப்பு
அதன்பின் ஒருநாள் அஜித் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்த நிகழ்வும் நடந்தது. அப்போது இந்த சந்தேகம் அதிகம் ஆனது. ஆனால் போக போக அஜித் அரசியல் பக்கம் செல்லாமல், விளையாட்டு, சினிமா, தன்னுடைய மகள், மனைவி என்று இருந்துவிட்டார்.

முக்கிய பதவி
அதன்பின் ஜெயலலிதா மறைவிற்கு பின் மீண்டும் அஜித் அதிமுகவில் சேர போகிறார். கட்சியில் அவருக்கு முக்கிய பதவி கிடைக்க போகிறது. அடுத்த எம்ஜிஆர் இவர்தான், அதிமுகவை தூக்கி நிறுத்த போகிறார், என்றெல்லாம் வதந்திகள் வந்து அடங்கியது. ஆனால் அஜித் அதை எல்லாம் ஆடியோ வெளியீட்டு விழா போல கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் இருந்தார்.

மீண்டும் வருகிறது
தற்போது மீண்டும் அதேபோல் அஜித்தை அதிமுக கொஞ்சம் சொந்தம் கொண்டாட தொடங்கி உள்ளது. அமைச்சர் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி உட்பட பல அதிமுக தலைகள் அஜித்தை சொந்தம் கொண்டாட முயல்கிறார்கள். விஜய், ரஜினி, கமலுக்கு எதிராக அஜித்தை நிறுத்த முயல்கிறார்கள்.

இனியும் அப்படி இருப்பாரா?
இவ்வளவு வருடம் அரசியல் இல்லாமல் இருந்த அஜித் இனியும் அப்படியே இருப்பாரா என்று தெரியவில்லை. இனியும் அவர் அனைத்தில் இருந்தும் விலகி செல்வாரா என்று தெரியவில்லை. அஜித் ரசிகர்களோ, அஜித் அரசியலுக்கு வரவே கூடாது அதற்கு சிறுத்தை சிவாவே மேல் தல என்று ''தல தெறிக்க'' ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்று வரை
அஜித் இது தொடர்பாக இன்று வரை எதுவும் பேசவில்லை. இனியும் பேசுவாரா என்பது சந்தேகம்தான் . ஆனால் அரசியலை தேடி விஜய், ரஜினி, கமல் செல்லும் போது.. அரசியல் மட்டும் ஏனோ அஜித்தை தேடி செல்கிறது!












Click it and Unblock the Notifications