கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு- நீக்கப்பட்டோர் எனது ஆதரவாளர்கள் அல்ல... மு.க. அழகிரி பேட்டி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று சந்தித்துப் பேசினார். மேலும் மதுரையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர் எனது ஆதரவாளர்கள் அல்ல என்றும் அழகிரி கூறியுள்ளார்.
மதுரை திமுகவினர் அழகிரிக்கு ஆதரவாக, ஸ்டாலினுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டினர். இதனால் திமுக தலைமை அதிருப்தி அடைந்தது. ஒட்டுமொத்த மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்பையே கலைத்து பொறுப்புக் குழுவை நியமித்தது.

இதைத் தொடர்ந்து தேமுதிகவுடனான திமுகவின் கூட்டணி முயற்சிக்கு எதிராக அழகிரி கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அழகிரிக்கு கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்ற அழகிரி தாயார் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்தார். கருணாநிதியை அழகிரி குடும்பத்தினர் சந்தித்தனர்.
இந்நிலையில் அழகிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மு.க. ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இதன் பின்னணியில் இன்று திமுக தலைவரும் தனது தந்தையுமான மு.கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு மு.க.அழகிரி மீண்டும் சென்றார். அங்கு அவர் கருணாநிதியை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.
பின்னர் வெளியே வந்த மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் மதுரை செல்ல இருக்கிறேன். அதற்காக அப்பா என்ற முறையில் பொங்கல் வாழ்த்து பெற வந்தேன். எப்படி இருக்கே என்று கேட்டார். நல்லா இருக்கேன் என்று சொன்னேன்.
அமெரிக்காவில் உள்ள பேரன், பேத்தி, மகள் எப்படி இருக்காங்க என்று கேட்டார். நல்லா இருக்காங்க என்று சொன்னேன் என்றார். அப்போது உங்கள் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்களே என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, அவர்கள் என் ஆதரவாளர்கள் அல்ல.. அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது அவ்வளவுதான் என்றார் அழகிரி.
கருணாநிதியுடனான இச்சந்திப்பின் போது மு.க. அழகிரியின் மகள் கயல்விழியும் உடனிருந்தார்












Click it and Unblock the Notifications