ஆலங்குடி வேட்பாளர் மாற்றம்... உற்சாகக் கொண்டாட்டத்திற்கு இடையே திமுக அலுவலகத்திற்கு பூட்டு
புதுக்கோட்டை: ஆலங்குடி திமுக வேட்பாளர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள திமுக அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, கடந்த 13ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக சதீஷ் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

ஆனால், அதிமுக குடும்ப பின்னணி கொண்டவரை திமுக வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சதீஷை மாற்ற வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து அப்பகுதி திமுவினர் தொகுதி முழுவதும் பல்வேறு ஊர்களில் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள்.
அதன் தொடர்ச்சியாக ஆலங்குடி திமுக வேட்பாளரை மாற்றியது திமுக தலைமை. புதிய வேட்பாளராக அறந்தாங்கி ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான சிவ.வீ.மெய்யநாதன் அறிவிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தொகுதி முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, புதுக்கோட்டை தெற்கு திமுக மாவட்ட செயலாளர் கேபிகே தங்கவேல் தரப்பினர் ஆலங்குடியில் உள்ள திமுக அலுவலகத்தை பூட்டினர். மெய்யநாதன் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், மீண்டும் அப்பகுதியில் வேட்பாளரை மாற்றக் கோரி போராட்டங்கள் நடைபெறும் சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications