டாஸ்மாக்கிற்கு பாதுகாப்பு கொடுங்க... செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய ‘குடி’மகன்
பொள்ளாச்சி: டாஸ்மாக் கடைகளுக்கும், அதில் மது குடிக்க செல்பவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி மது போதையில் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்குக் கோரி பல்வேறு வகையில் போராடி வந்தவர் காந்தியவாதி சசிபெருமாள். இவர் கடந்த வாரம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடை ஒன்றை மூடக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய போது பரிதாபமாக உயிரிழந்தார்.

சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி போராட்டங்கள் வலுத்துள்ளன. பல்வேறு இடங்களில் செல்போன் கோபுரங்களில் ஏறி மதுவிலக்குக் கோரி போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த சூலக்கல் பகுதியில் இருந்த செல்போன் கோபுரம் மீது இளைஞர் ஒருவர் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய நபரை கீழே இறங்கி வரும் படி கோரிக்கை விடுத்தனர்.
போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த இளைஞரும் கீழே இறங்கி வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் பெயர் குப்புசாமி என்றும், பொள்ளாச்சி சூலக்கல்லை அடுத்த நாராயண செட்டிபாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், ‘டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளுக்கு குடிக்க வருபவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்' எனவும் குப்புசாமி போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார்.
குப்புசாமி குடி போதையில் இருந்ததால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், குடிபோதை இளைஞர் ஒருவர் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு கேட்டுபோராட்டம் நடத்திய சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications