கர்நாடகாவைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு அமைதியாக நடந்தது - 100% வெற்றி #TamilNaduBandh
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதைக் கண்டித்து தமிழகத்திலும், புதுவையிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. காலை 6 மணி முதல் 6 மணிவரை நடைபெற்ற இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், சங்கங்கள் ஆதரவு தெரிவித்தனர். முழு அடைப்பு போராட்டம் எந்த வித அசம்பாவிதங்களும் இன்று அமைதியாக நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள், அரசியல் கட்சிகள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், பெட்ரோல் பங்குகள் உரிமையாளர்கள் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்தால்
100 சதவிகிதம் முழுஅடைப்பு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கை முடங்கியது மாலை 6 மணிக்குப் பின்னர் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பியது.
கடைகள் அடைப்பு
இன்று கடைகள் முழுமையாக அடைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. வணிகர் சங்க பேரவை, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடை அடைப்பு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. 6 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டன.
ரயில் மறியல்
இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ரயில் மறியல் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
வெறிச்சோடிய சாலைகள்
ஆட்டோக்கள் இயங்கவில்லை, தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டிருந்தன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின. 6 மணிக்கு பந்த் முடிந்த பின்னர் மெதுவாக இயல்பு நிலை திரும்பியது. கர்நாடகாவில் பல தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. அதே நேரத்தில் தமிழகத்தில் அது போன்ற எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை.
அமைதியாக நடந்த முழு அடைப்பு
எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்த காரணத்தால் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்றைய போராட்டங்களின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு சில கல்வீச்சு சம்பவங்களைத் தவிர முழு அடைப்பு முழுவதும் அமைதியாக நடந்து முடிந்ததால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.