ஜி.கே.வாசனின் புதிய கட்சியை பூமழை தூவி வரவேற்கும் தமிழக கட்சிகள்! கூட்டணி அமைக்க மும்முரம்!!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியை உடைத்து ஜி.கே.வாசன் உருவாக்கும் புதிய கட்சி தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் கூட்டணி மாற்றங்களுக்கு வித்திடும் வகையில் அமையக் கூடும் எனத் தெரிகிறது.
புதிய கட்சிக்கு தலைமை ஏற்கும் ஜி.கே.வாசனுக்கு அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். மூப்பனார் போலவே வாசனும் மற்ற கட்சியினருடன் நன்கு பழகியுள்ளார். தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும், யாரையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்து பேசியதே இல்லை.

இந்த பண்பு வாசனுக்கு இப்போது கை கொடுத்துள்ளது. வாசனை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டால் காங்கிரஸ் வாக்குகளைப் பெற முடியும் என்பது அனைத்துக் கட்சிகளின் வியூகமாக இருக்கிறது.
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தான் முதன் முதலில் ஜி.கே. வாசனுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். " உறுதியான முடிவு எடுத்து உத்வேகத்துடன் செயல்படுங்கள்" என்று வாசனை ஊக்கப்படுத்தியிருக்கிறார் விஜயகாந்த்.
பா.ம.க., ம.தி.மு.க. தரப்பில் இருந்தும் வாசனுக்கு வாழ்த்துக்கள் சென்றுள்ளனவாம். திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கூட நட்பு ரீதியாக வாசனை தொடர்பு கொண்டு புதிய கட்சிக்கு வாழ்த்தியதோடு சில அறிவுரைகளையும் கூறியிருக்கின்றனர்.
இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களும் ஜி.கே.வாசனின் புதிய கட்சி தொடங்கும் முயற்சியை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
இப்படி அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் ஜி.கே. வாசனை வளைத்துப் போடுவதில் தீவிரமாக இருக்கின்றன.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய கூட்டணி ஏற்படுத்த வாசனின் வருகை உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications