ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து... பின்னணி என்ன?
சென்னை : தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் காரணம் தெரிவிக்கப்படாமல் திடீரென ரத்து செய்யப்பட்டது.
ஜெயலலிதா கடந்த 4 ஆம் தேதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்க சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் இதுவரை தலைமைச் செயலகத்திற்கு செல்லவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் மூலம் தேர்வான கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 1,016 பேருக்கு தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகலில் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்குவார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
மேலும், பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள்களையும் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கு உயர்கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
10 நாட்களுக்கு பிறகு ஜெயலலிதா தலைமைச் செயலகம் வர இருந்ததையொட்டி, கலங்கரை விளக்கம் முதல் தலைமைச் செயலகம் வரை நடை பாதைகளை அடைத்து கடற்கரை சாலைகளில் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.
இதுகுறித்து அதிகாரிகளும் உரிய பதில் அளிக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விளக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் எந்தவித காரணமும் வெளியிடப்படாமல் ரத்து செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.