என்னிடம் சொல்லிவிட்டு தான் எம்.பி.,க்கள் அணி மாறினார்கள் : டி.டி.வி.தினகரன் 'கூல்’ பேட்டி
எம்.பி.,க்கள் அணி மாறும் முன் என்னிடம் சொல்லிவிட்டு தான் சென்றார்கள் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி : சமீபத்தில் எடப்பாடி அணிக்குச் சென்ற மூன்று எம்.பி.,களும் என்னிடம் சொல்லிவிட்டுத் தான் அணி மாறினார்கள் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்து உள்ளார்.
திருச்சியில் அ.தி.மு.க அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது நேற்று எம்.பி.,க்கள் மூன்று பேர் அணி மாறியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
முதல்வர் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்த எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் ஆகிய மூன்று பேரும் அந்த அணிக்கு மாறும் முன் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், அணி மாற இருப்பதாக தெரிவித்ததாகவும் தினகரன் தெரிவித்தார்.
மேலும், தற்போது சின்னம் அவர்களிடத்தில் இருப்பதால், எங்களை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதால் நாங்கள் அவர்கள் அணிக்குப் போகிறோம். மேல்முறையீடு செய்து சின்னத்திற்கு தடை உத்தரவு வாங்கியதும் உங்கள் அணிக்கே வந்துவிடுகிறோம் என்று அவர்கள் சொன்னதாகவும், அது எல்லாம் வேண்டாம் நீங்கள் அங்கேயே இருங்கள் என்று தான் கூறி உள்ளதாகவும் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
வேறு வழி இல்லாமல் அமைச்சர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தன்னைப்பற்றி பேசி வருவதாகவும், இதற்கு எல்லாம் பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டு உள்ளார்.