தேமுதிகவுடன் பாஜக கூட்டணி நிச்சயம் ஏற்படும்... இல.கணேசன் நம்பிக்கை !
சென்னை: பாஜக சார்பில் தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம் எனவே பாஜக-தேமுதிக கூட்டணி நிச்சயம் உருவாகும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன் கூறுகையில், தேமுதிக மகளிர் அணிக் கூட்டத்தில், விஜயகாந்த் பேசியதில் இருந்து திமுகவுடன் எந்த நிலையிலும் கூட்டணி அமைக்க மாட்டார்.

ஆனால், விஜயகாந்தின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என பிரேமலதா அறிவித்துள்ளார். எனவே தேமுதிகவுடன் பாஜக கூட்டணி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாகவே செல்கிறது. கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் நிபந்தனைகள் விதிக்கிறார் என கூறப்படுவதில் உண்மை இல்லை. பாஜகவும் நிபந்தனைகளை விதிக்கவில்லை. கருத்துகளை மட்டுமே பரிமாறி வருகிறோம்.
பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்க மாட்டோம் என கூறியிருந்தோம். கூட்டணி முடிவாகியவுடன் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அறிவிப்போம். விஜயகாந்தின் தலைமையை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
பாஜக தனது நிலையில் இருந்து கீழிறங்கி வந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கருதக் கூடாது. யதார்த்த நிலையை தெளிவாக புரிந்து வைத்திருப்பதுதான் அதற்கான காரணம். தேமுதிக கூட்டணிக்கு நிச்சயமாக வரும் என்ற நம்பிக்கை உண்டு. என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications